எப்போது நீ உனக்காக உன் நேரத்தை செலவிடுகிறாயோ, அதுவே உன் நல்ல நேரம். நீங்கள் நிச்சயம் செய்து முடிக்க வேண்டிய வேலைகளுக்காக, நல்ல நேரம் பார்த்து காத்திராதீர்கள். அந்த வேலையை செய்ய எப்பொழுது தொடங்குகிறீர்களோ அதுவே நல்ல நேரம்.
உங்கள் நேரத்தை சரிவர பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். நேர மேலாண்மையை அறிந்து கொண்டால், உங்களுடைய நிலை மேன்மையடையும்.
சரியான நேரத்தில் சரியானவற்றை சரியாக செய்தாலே, நமக்கு சரியாக நடக்க வேண்டிய அனைத்தும் சரியாக நடக்கும்.
உங்களுக்கு கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களில் பல பேர் Life is short, இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். அப்படி மனதில் நினைத்துக் கொண்டே பல வருடம் நீங்கள் வாழதான் போகிறீர்கள். எனவே உங்களை அதற்காக தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, நீங்கள் கூறிக்கொள்ளும் வார்த்தைகள், உங்களின் சோம்பேறித் தனத்திற்கு இன்னும் தீனிபோடும்.
உதாரணத்திற்கு என் தந்தை என்னிடம் அவ்வப்போது "உன் உடல் எடை சற்று கூடிவிட்டது போல் தோன்றுகிறது, உடற்பயிற்சி செய்து அதை குறைக்கப் பார்" என்பார். நான் அவரிடம் "உங்களுக்கும் தான் தொப்பை உள்ளது, அதை ஏன் நீங்கள் குறைக்க முயற்சி செய்வதில்லை" எனக் கேட்டால், "எனக்கு வயதாகிவிட்டது இனி நான் உடல் எடையைக் குறைத்து என்ன செய்யப் போகிறேன்" எனக் கூறி சிரித்துக்கொண்டே இடத்தை விட்டு நகர்வார்.
ஆனால் இத்தகைய மனநிலை முற்றிலும் தவறானதாகும். ஒரு விஷயம் தவறு என்றால் அதை உடனடியாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல எந்த வயதிலும் நமக்கு பிடித்தபடி நம் வாழ்க்கையை மாற்ற முடியும். எனவே தேவையில்லாமல் பல காரணங்களை நீங்களே ஏற்படுத்திக் கொண்டு ஒரு செயலை தள்ளிப் போடுவதற்கு பதிலாக, முயற்சி செய்துதான் பார்க்கலாமே என முடிவெடுத்து செயல்படுங்கள்.
பல ஆண்டுகள் கழித்து, நாம் முன்னதாகவே இதை செய்திருக்கலாமோ என்று நினைக்காமல் இருக்க வேண்டுமானால், தற்போது நேரத்தை சரிவரப் பயன்படுத்தி, உங்களுடைய முன்னேற்றத்திற்கு கடினமாக உழையுங்கள்.