

நீங்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுபவராக இருந்தால், 'டூமர்' (Doomer) என்ற கதாபாத்திரத்தை மீம்ஸ்களில் பார்த்திருப்பீர்கள். இவர்களைப் போலவே 'பூமர்' (Boomer), 'ப்ளூமர்' (Bloomer) போன்ற கதாபாத்திரங்களும் உள்ளன. 'டூமர்' என்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்களை, குறிப்பாக 20 வயதுக்குட்பட்ட ஆண்களைக் குறிக்கிறது. இவர்களுக்கு வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இருப்பதில்லை, எப்போதும் தனியாக இருக்கவே விரும்புகிறார்கள், மேலும் தங்கள் வாழ்க்கை ஒருபோதும் மாறாது என்ற விரக்தியான மனநிலையிலேயே இருப்பார்கள்.
Doomer Vs Boomer: என்ன வித்தியாசம்?
'டூமர்' மனநிலை கொண்டவர்கள், வாழ்க்கை அர்த்தமற்றது என்று நினைக்கிறார்கள். தங்கள் சோகமான வாழ்க்கைக்குத் தாங்கள்தான் காரணம் என்பதை ஏற்காமல், மற்றவர்களையே குறை கூறுவார்கள். மீம்ஸ்களில் இவர்கள் தனக்குப் பிடிக்காத வேலையைச் செய்வது போலவும், உறவுச் சிக்கல்களில் இருப்பது போலவும், புகை மற்றும் மதுப் பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பது போலவும் காட்டப்படுகிறார்கள்.
ஆனால், இவர்களுக்கு நேர்மாறானவர்கள் 'பூமர்கள்'. இவர்கள் 1946 முதல் 1964 வரை பிறந்தவர்கள். பூமர்கள் எப்போதும் நேர்மறையாக சிந்திப்பார்கள், அவர்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அதற்குக் காரணம், அவர்கள் காலத்தில் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் போன்றவை இல்லை. அதனால் அவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்ளவில்லை. அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்தியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
டூமர்கள் ஏன் இப்படி ஆனார்கள்?
இன்றைய 'டூமர்' இளைஞர்கள் இணையத்தின் வேகமான வளர்ச்சிக் காலத்தில் பிறந்தவர்கள். இன்டர்நெட், கணினி, போன் போன்றவை இவர்களுக்கு எளிதாகக் கிடைத்துவிட்டன. இதனால், உலகின் எல்லா தகவல்களும் இவர்களை எளிதில் வந்தடைகிறது. சமூக ஊடகங்களில், மற்றவர்கள் மகிழ்ச்சியாகப் பயணம் செய்வது, பணம் சம்பாதிப்பது போன்ற விஷயங்களைப் பார்த்து, தங்களால் அப்படி வாழ முடியவில்லையே என்று ஒப்பிட்டுச் சோகமடைகிறார்கள். மேலும், உணவு, பொழுதுபோக்கு என அனைத்தும் எளிதாகக் கிடைப்பதால், ஒரு விஷயத்திற்காக முயற்சி செய்யும் தைரியத்தையும் இவர்கள் இழந்துவிடுகிறார்கள்.
இவர்களுக்கு இந்த "வாழ்க்கை அர்த்தமற்றது" என்ற எண்ணம் புதிதல்ல. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவஞானி ஷோபனார் (Schopenhauer), வாழ்க்கையே துயரமும் வலியும் நிறைந்ததுதான் என்று கூறினார். மனிதர்கள் பணம், புகழ், உறவுகள் போன்ற கற்பனையான இலக்குகளைத் துரத்துவதாலேயே சோகமாக இருக்கிறார்கள் என்றார். இதற்குத் தீர்வாக, ஆசைகளையே துறந்துவிடுவது அல்லது கலைகளில் ஈடுபட்டுத் துக்கத்தை மறப்பது என்று அவர் கூறினார்.
மற்றொரு தத்துவஞானியான ஃபிரெட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche), வாழ்க்கை அர்த்தமற்றது என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால், அதற்காகச் சோகமாக இருக்கத் தேவையில்லை என்றார். வாழ்க்கை அர்த்தமற்றது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டு, சமுதாயம் சொல்லும் அர்த்தங்களைப் பின்பற்றாமல், நமக்கான சொந்த அர்த்தத்தை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
நாம் 'டூமர்' மனநிலையிலிருந்து 'ப்ளூமர்' Bloomer மனநிலைக்கு மாற வேண்டும். 'ப்ளூமர்' என்பவர், வாழ்க்கை கடினமானது, அர்த்தமற்றது என்று தெரிந்த பிறகும், அதில் சோர்ந்து போகாமல், தனக்கான வாய்ப்புகளையும் அர்த்தங்களையும் தேடிக் கண்டுபிடித்து மகிழ்ச்சியாக வாழ்பவர் ஆவார். வாழ்க்கை கடினமாக இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் சோகமாகவோ, முயற்சியைக் கைவிடவோ தேவையில்லை.