Who Moved My Cheese? என்ற ஆங்கில புத்தகம் இதுவரை பல லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. ஒரே மூச்சாக ஒரு புத்தகத்தை படித்தேன் என்றால் இந்த புத்தகத்தைக் கூறலாம். ஏனென்றால் இதில் இருப்பது வெறும் 39 பக்கங்கள் மட்டுமே. என்னதான் சிறிய புத்தகமாக இருந்தாலும் மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம்.
இதைப் படிக்க எனக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. ஆங்கிலம் நன்கு அறிந்தவராக இருந்தால், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே படித்துவிட முடியும் என நினைக்கிறேன்.
புத்தகத்தின் மையக் கருத்து:
மாற்றத்தைக் கண்டு அஞ்சாதே. மாற்றம்தான் ஒருவனை முன்னேற்றும்.
நம் வாழ்வில் எதுவுமே நிரந்தரமற்ற ஒன்று.
மாற்றம் என்பது நம் வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருத்தல் வேண்டும்.
மாற்றத்தை எதிர்கொள்ள அஞ்சி, ஒரே இடத்தில் இருந்தோமோயென்றால், நம்மை யாரும் காப்பாற்ற முடியாது.
மாற்றம் என்பதே நம் வாழ்க்கையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கிறது.
தற்போது இருக்கும் ஒன்றை நாம் இழந்துவிட்டால் என்ன செய்வது என்னும் எண்ணம்தான், நமக்கான ஆகச்சிறந்த வாய்ப்புகளை நாம் அடையாமல் தடுக்கிறது.
பயத்தைக் களைந்து, தைரியமாக நமது வாழ்க்கையோடு நாமும் நகர்ந்து சென்றால், வாழ்க்கையின் மிக அழகான தருணங்களை நாம் உணர முடியும்.
இதுபோன்று இன்னும் பல கருத்துக்களை இந்த சிறிய புத்தகம் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களின் வரிசையில் இந்த புத்தகத்தை நான் நிச்சயமாக சேர்ப்பேன். முடிந்தால் இந்த புத்தகம் வாங்கி படித்துப் பாருங்கள், வாழ்க்கை பற்றிய சிறு தெளிவு பிறக்கும்.
மாற்றம் என்பது, நம்மிலிருந்தும் தொடங்க வேண்டிய ஒன்று…