“ஒரு மனிதன் தனியாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்: அவன் மிகவும் அன்பானவனாக இருப்பதால் அல்லது அவன் மிகவும் காயப்பட்டவனாக இருப்பதால்.”
ஜான் கிரீன்
இந்த வரிகள் சிறப்பான நபர்கள் ஏன் தனிமையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்கான கேள்வியை எழுப்புகிறது. சமூகத்தில் சிறப்பான திறமைகள் மற்றும் குணங்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் தனிமையை அதிகம் விரும்புவதாக கருதப்படுகிறது. ஆனால், அவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் தெரியுமா?
சிறப்பான நபர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள், மற்றவர்களும் தங்களைப் போலவே ஆழமாக சிந்திக்கவும் உணரவும் வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிறைவேறாமல் போவதால், தனிமை உணர்வு ஏற்படலாம்.
சிறப்பான நபர்கள் தங்கள் தனித்துவத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். அவர்கள் கூட்டத்தில் கலந்துவிடாமல் தங்கள் சொந்த பாதையை பின்பற்ற விரும்புகின்றனர். சமூக அழுத்தங்கள், எதிர்பார்ப்புகளில் இருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள தனிமையை தேர்ந்தெடுக்கின்றனர்.
இவர்கள் ஆழமாக சிந்திப்பவர்களாக இருப்பதால். இந்த உலகத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட விதமாக சிந்திக்கின்றனர். சமூக உறவுகள் அவர்களின் சிந்தனை ஆழத்தை தடை செய்யும் என அவர்கள் நினைப்பதால், தனியாக இருக்கவே விரும்புகின்றனர். மேலும், இவர்கள் மேலோட்டமான உறவுகளை விரும்புவதில்லை. ஆழமான அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், அத்தகைய உறவுகளை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. எனவே, தனிமையாகவே இருக்க நினைக்கின்றனர்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் சில நபர்களை தனிமையை நோக்கி தள்ளலாம். ஒரு நிறைவான உறவில் ஏமாற்றப்பட்டவர்கள் மற்றவர்களை நம்புவதை முழுமையாக நிறுத்தி விடுகின்றனர்.
சில திறமைசாலிகள் தங்களின் தனித்துவத்தை பிறர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிற பயத்தில் தனியாகவே இருப்பார்கள். ஒரு சிலர் தங்களின் படைப்பாற்றலுக்கான விஷயங்களில் முழுமையாக ஈடுபட தனிமையை விரும்பி ஏற்கின்றனர்.
சிறப்பான நபர்கள் ஏன் தனிமையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் நாம் சொல்லிவிட முடியாது. இதற்கு பல காரணிகள் இருக்கலாம். தனிமை என்பது எப்போதும் ஒரு எதிர்மறையான விஷயமாக இருக்க வேண்டியதில்லை. சில நபர்களுக்கு தனிமை என்பது சுய அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகும். ஆனால், நீண்ட கால தனிமை மனசோர்வு மற்றும் பிற உளவியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சிறப்பான நபர்கள் தங்களின் தனிமையை நிர்வகிக்கவும், ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்.