அதிக புத்திசாலியாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. பொதுவாகவே அதிக புத்திசாலித்தனம் என்பது வெற்றி, அதிக பணம் மற்றும் அதிக மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் பெரும்பாலான புத்திசாலிகள் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இப்பதிப்பில் பார்க்கலாம்.
புத்திசாலித்தனம் என்பது எளிதாக அளவிடக்கூடிய ஒரு பண்பு அல்ல. இது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பகுத்தறியும் திறன், சிக்கலை தீர்க்கும் திறன், கற்பனை திறன், உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் மற்றும் சமூக திறன்கள் அடங்கும். மகிழ்ச்சி என்பது ஒரு சிக்கலான உணர்வு நிலை. இது பணம், அந்தஸ்து போன்றவற்றால் மட்டுமின்றி, நமது மனநிலை, நேர்மறை உணர்வுகள், வாழ்க்கையில் திருப்தி போன்றவற்றாலும் உண்டாகிறது.
புத்திசாலிகள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதற்கு காரணங்கள்:
புத்திசாலிகளுக்கு பல திறமைகள் இருப்பதால் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அவர்கள் குழப்பம் அடையலாம். இது அவர்களது மனதுக்குள் பல சிந்தனைகளுக்கு வழி வகுத்து மகிழ்ச்சியை குறைக்கக்கூடும்.
இந்த சமூகம் புத்திசாலிகளிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளை அவர்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போனால், மன அழுத்தம் ஏற்பட்டு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள்.
புத்திசாலிகள் மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்திப்பதால், பிறருடன் ஒன்ற முடியாமல் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படலாம். இது அவர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்கி, கஷ்டத்தைக் கொடுக்கிறது.
புத்திசாலிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு குடும்பம் நண்பர்கள் சமூகம் என அனைவருடனும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க வேண்டும். முடிந்தவரை நீங்கள் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து அதில் உங்களுக்கான மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காமல் உங்களை நீங்கள் முன்னேற்றம் விஷயங்களில் கவனம் செலுத்தவும். உங்களது உடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனதை நிதானமாக வைத்திருக்க யோகா தியானம் போன்ற நுட்பங்களை பயிற்சி செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பிறரிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்.
புத்திசாலித்தனம் என்பது ஒருவருக்கு மகிழ்ச்சியை நிச்சயம் கொடுத்துவிடாது என்றாலும் அது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் ஒரு கருவி. புத்திசாலிகள் தங்கள் திறமைகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தனிப்பட்ட வளர்ச்சி, நேர்மறை உறவுகள் மற்றும் மன அமைதி ஆகியவை அவசியம்.