உறுதியான மன உறுதி இருந்தால் எதையும் வெல்லலாம்!
நமக்கு வாழ்க்கையில் பல நெருக்கடிகள் உருவாகும் ஆனால் அந்த மாதிரி சூழ்நிலையில் கூட நாம் முயற்சியை கை விடக்கூடாது. முயற்சி செய்யும்போது நமக்கு முதலில் தேவைப்படுவது தன்னம்பிக்கை தைரியம் இந்த இரண்டும்தான். சிலரைப் பார்த்து நீங்கள் பொறாமை படலாம் எப்படி அவரால் எல்லாவற்றையும் சாதிக்க முடிகிறது என்று, அதற்கு மிக முக்கிய காரணம், முயற்சி தன்னம்பிக்கை தைரியம் இந்த மூன்றும்தான் அடித்தளமாக இருக்கும்.
நெருக்கடி நிலைமையில் ஏதாவது ஒரு இக்கட்டான நிலையை எதிர் கொண்டால், நாம் உடனடியாக சூழ்நிலையை ஆராய வேண்டும். பின் விளைவுகளை யூகித்து சாமர்த்தியமாக, மன உறுதி, தைரியம் மற்றும் சரியான மனப்பான்மையுடன் முன் நோக்கிச் சென்று நிலைமையை தீர்க்க செயல்பட வேண்டும்.
துன்பங்களை எதிர் கொள்ளும்போது, உங்கள் கனவுகளை நிறை வேற்றுவதற்கு தைரியமும், மன உறுதியும் இருந்தால் நீங்கள் எடுத்த செயலில் வெற்றி அடையலாம்.இந்த அழகான கதை, தென் அமெரிக்காவின் கிவேசுவா (இன்கன்) இந்தியர்களால் தோன்றுவிக்கபட்ட பிரபலமான நீதிக் கதைகளில் இதுவும் ஒன்று.
ஒரு சமயம், தாசு என்ற ஒரு சிறிய பறவை பரந்த காட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தது.
கோடைக் காலத்தில் ஒரு நாள், கொடூரமான காட்டுத் தீயானது கொழுந்துவிட்டு எரிந்தது. அதன் தீப்பிழம்புகள் காட்டில் இருக்கும் பல மரங்கள், விலங்குகளை விழுங்கிக் கொண்டிருந்தது.
மற்ற பறவைகள், வானில் உயரமாக பறந்து, வெகு தொலைவிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு சென்று கொண்டிருந்தன;
ஆனால் தாசுவால், தன்னுடைய அருமையான இருப்பிடம் மற்றும் எரிந்து கொண்டு இருக்கும் இடத்தை விட்டுச் செல்வதற்கு மனம் வரவில்லை இரவும் பகலும், தன் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து, தனது சிறு அலகில் ஆற்று நீரை நிரப்பிக் கொண்டு, முன்னும் பின்னும் அலைந்து காட்டுத் தீயை அணைக்க தாசு முற்பட்டது.
அந்த சிறிய பறவை தாசுவின் அரிதான துணிச்சலும், அசைக்க முடியாத மன உறுதியும் போற்றத்தக்க வகையில் இருந்தது.
சிறிது நேரத்தில், பெரும் மழை காடுகளின் மீது பொழிந்து, காட்டுத் தீயை தணித்தது. உங்களிடம் உள்ள மன உறுதியைக் கொண்டு சுற்றுப்புற சூழ்நிலையையும் மாற்றிக்கொள்ளும் முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.
பின்னர், உங்கள் தைரியத்தையும், திறமையையும், செயல்பாட்டையும் கண்டு ஊரே மெச்சுவார்கள். ஏன் நீங்களே வியப்பும், ஆச்சரியமும் அடைவீர்கள். உறுதியாக இருக்கும் ஒருவரின் மிகச் சிறிய செயல்கள் கூட உலகத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றது.
தாசு பறவையின் செயல்பாட்டில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் தெரியுமா? எப்பேர்ப்பட்ட நெருக்கடி வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான். அப்படி பழகிக் கொண்டால் சக்சஸ் என்ற ஒரு வார்த்தை உங்களை பின் தொடர்ந்து ஓடிவரும்.