உங்களுடைய வாழ்க்கையை எதுவும் செய்யாமல் வீணடித்து விட்டதாக அதிக கவலை கொள்ளும் நபரா நீங்கள்? கவலை வேண்டாம், இப்போது நினைத்தாலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இந்த உலகில் யாருமே தங்களது வாழ்க்கையை எல்லா காலத்திலும் சிறப்பாக கொண்டு சென்ற நபர்கள் இல்லை, ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கை மோசமாக இருந்திருக்கும், சில காலம் எதையும் செய்யாமல் துன்பத்திலேயே வாழ்க்கையை கழிப்பவர்கள் ஏராளம். என்னுடைய பருவங்களிலும் சில காலம் நான் மோசமாக இருந்திருக்கிறேன். குறிப்பாக என்னுடைய 20களின் தொடக்கத்தில், வாழ்க்கை பற்றிய என்னுடைய எண்ணம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
எதிலும் அந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்ளாமல் எல்லா விஷயங்களில் இருந்தும் ஒதுங்கியே வாழ்க்கையை நடத்தி வந்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்குந் பிறகு என்னைச் சுற்றியுள்ள நபர்கள் என்னை விட சிறப்பாக மாறிக்கொண்டே செல்வது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் நாம் நம்முடைய வாழ்க்கையை இப்படியே வாழ்ந்தால் அவ்வளவுதான் என்ற ஆழமான சிந்தனை தோன்றியது.
நாம் மோசமான சூழ்நிலையில் இருக்கும் போது முதலில் நம்மிடமே நாம் சொல்லிக் கொண்டிருக்கும் தவறான கதைகளை ரியலைஸ் செய்ய வேண்டும். பல நபர்கள் தாங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்காத போது, அவர்களுக்குள்ளேயே சமாதானப்படுத்திக் கொள்ளும் எதிர்மறையான கதைகளை சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது, தங்களின் தோல்விக்கு பெரும்பாலும் பிறரை குறை கூறுபவர்களே ஏராளமாக உள்ளனர். எனவே அந்த தருணத்தின் நிலையை உணர்ந்து கொண்டு, கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தாலும் இப்போது நாம் முயன்றால் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
“இத்தனை காலம் என்னுடைய வாழ்க்கையை நான் மோசமாக நடத்தி விட்டேன். இன்று முதல் இந்த தருணத்தில் இருந்து அதை சிறப்பாக மாற்றுவதற்கான முயற்சியை நான் மேற்கொள்ளப் போகிறேன்” என தீர்க்கமான முடிவெடுத்து, உங்களை தடுத்து நிறுத்தும் விஷயங்களை உடனடியாக விட்டு விலகுங்கள். உங்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை, எதிர்காலத்தில் எதை உருவாக்க நினைக்கிறீர்கள் என்பதில் தெளிவான முடிவெடுத்து அதற்கான செயல்களில் இறங்குங்கள்.
நம்முடைய வாழ்க்கை நினைத்தது போல நடக்காத போதுதான் பல அனுபவங்களை நாம் கற்க்கிறோம். அடுத்தது என்ன என்பது பற்றிய யோசனையும் நமக்குள்ளே வருகிறது. எனவே உங்களின் மோசமான காலம்தான், உங்களை சிறப்பாக மாற்றுவதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களை தடுத்து நிறுத்தும் எல்லா விஷயங்களையும் இன்றே நிறுத்திவிட்டு, எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்காமல் உங்களை சிறப்பாக மாற்றும் விஷயங்களில் கவனம் செலுத்தினால், நிச்சயம் உங்களுக்கான இடத்தை நீங்கள் அடையலாம்.