மகிழ்ச்சி ஒரே நொடியில் தோன்றி மறைகிற மின்னல் போன்றது. அதை நிரந்தரமாக்க முடியாதா என்பதுதான் மனிதனின் ஏக்கம்.
சிலருக்கு உணவுதான் மகிழ்ச்சி. அவர்களுக்கு அதுதான் முக்கியம். சிலருக்கு பாடுவது மகிழ்ச்சி. கண்களால் படித்தல், பார்த்தல், ஆராய்தல், அறிதல் இதன் மூலம் சிலருக்கு மகிழ்ச்சி .மேலோட்டமாக கவனித்தால் புலன்கள் மூலம் மகிழ்ச்சிபோல் தோன்றினாலும் அவை கருவிகள் மாத்திரமே என்பதால் மனதை நெறிப்படுத்தும் வழியே நிரந்தர மகிழ்ச்சிக்கு அடிகோலும். மகிழ்ச்சி சிலருக்கு மானுட குலத்திற்கு பங்களிப்பு அளிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தன் பிறப்பை அர்த்தமாக்கிக் கொள்ளும் பொருட்டு தீவிரமாக பணியாற்றுவார்கள். மகிழ்ச்சி மண்டபத்துக்குள் கதவுகள் இல்லை. பல வழிகளில் நுழைய முடியும். ஆனால் சிலர் குறிப்பிட்ட செயலில்தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுகிறார்கள்.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆனால் சிலர் என்னுடைய மகிழ்ச்சிதான் முக்கியம் என எண்ணுவதால் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. மகிழ்ச்சிக்கு எதிர்ப்பதம் சோகமோ துக்கமோ அல்ல. துக்கங்கள் நம்மை மீறி வருபவை. அவற்றைக் கடப்பது கூட மகிழ்ச்சியின் மூலம்தான். தவறான வழிகளில் பணம் ஈட்டியவனின் மகழ்ச்சி மூலம் ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்கமுடியாது. அச்சப்படுபவன் மகிழ்ச்சி வழிப்பறி செய்யப்படுகிறது. நேர்வழியில் வாழ்பனுக்கு மகிழ்ச்சி உள்ளேயும் வெளியேயும் ஊடுருவுகிறது. வலிகளை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வதுதான் வாழ்க்கையின் சாரம் நாம் மகிழ்ச்சியை எதிர்பார்த்தே பல வலிகளைப் பொறுத்துக் கொள்கிறோம்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தங்களுக்குத் கிடைக்காததை யெல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாக வைக்க நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் அவர்கள் பள்ளியிலிருந்து வந்ததும் ஆறுதலாக பேசுவதும் அவர்கள் மனதிற்கேற்றபடி நடந்துகொள்ளுவதைதான் அவர்கள் விரும்புகிறார்கள். தன்னம்பிக்கையும் வைராக்கியத்தையும் விட பெரிய சொத்தை குழந்தைகளுக்குக் கொடுக்க முடயாது. நாம் எத்தனையோ பேர் இன்னும் போராட்டத்துடன் வாழ்வதைப் பார்க்கிறோம். மழை பெய்யும்போது பழம் கூடையில் விற்பவர்கள் என்ன செய்வார்கள். கட்டடத் தொழிலாளர் நிலை என்ன ஆகும்
பறவைகள் உணவுக்கு என்ன செய்யும். இப்படிப் பல பேர்களின் வாழ்க்கை பரிதாபமாக இருப்பதை உணர்ந்தால் நாம் மகிழ்ச்சியில் லையே என மனமுருகமாட்டோம்.
நமக்குள் மகிழ்ச்சி ததும்பும்படி வாழ்ந்து எதைச் செய்தாலும் எந்தப் பொருளைக் கையாண்டாலும் யாரிடம் பழகினாலும் தனிமையில் இருந்தாலும் மனம் பேரானந்தத்தில் திளைக்கும். அப்போது எதை உண்டாலும் சுவைக்கும்.நடைபயின்றால் அது தியானம் ஆகும் குளித்தால் அது அபிஷேகமாகும்.
நாம் பலருக்கு இளைப்பாறும் இடமாகவும் சாயும் தோளாகவும் படுக்கும் மடியாகவும் மாற முடியும். மகிழ்ச்சியை நோக்கிய பயணமாய் வாழ்வை மாற்ற விழிப்புணர்வுடன் வாழ்ந்து சந்திக்கிறார்கள். மீதெல்லாம் இனிமையாகவும் இனிய சொற்களை படர விடுவோம். மகிழ்ச்சி உடனடியாக முளைக்கும் விதை. துரிதமாக மலரும் மொட்டு. கண்டங்களைத்தாண்டி நறுமணம் வீசும் பூங்கொத்து. மகிழ்ச்சியாக இருக்க காரணங்கள் தேவையில்லை. மகிழ்ச்சியே மகிழ்ச்சிக்கும் காரணமாகட்டும்.