* பெண்களின் அந்த அசெளகரியமான நாட்கள் போல ஆண்களுக்கும் எரிச்சல் தரும் விஷயம் உண்டு. அதுதான் காலை நேர அவசர ஷேவிங். சிலர் இதைத் தவிர்க்கவே தாடி வளர்ப்பதும் உண்டு. ஆனால் எல்லா மனைவிகளும் விரும்புவது விளம்பரத்தில் வருவது போன்ற ‘மழமழ’ கன்னம்தான்.
கணவர் ஷேவிங் செய்துகொண்டு இருக்கும்போது ஏதாவது ‘தொண தொண’ என்று பேசாதீர்கள். ஷேவிங் முடித்த பின் சிறிது தேங்காய் எண்ணெய் கொடுத்து முகத்தில் தேய்க்கச் சொல்லவும். தேங்காய் எண்ணெய் முகத்தின் எரிச்சலைப் போக்கும். தேங்காய் எண்ணெய் தடவுவது முகத்திற்குப் பொலிவைத் தரும். விலை உயர்ந்த ‘ஆஃப்டர் ஷேவ் லோஷன்’ தேவைப்படாது. லோஷனின் வாசனையை விரும்பாத ஆண்கள் குளித்தபின் சிறிது பன்னீரை முகத்தில் தடவி, பின்பு பவுடர் பூச நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கலாம்.
உங்கள் கணவர் நல்ல தரமான ப்ளேடு உபயோகிக்கிறாரா என்று பார்த்துக்கொள்ளவும். அடிக்கடி சோப் தேய்க்க உபயோகிக்கும் பிரஷ்ஷை மாற்றவும், உறவினர்கள் வீட்டிற்கோ, வெளியூர் செல்லும்போதோ மறக்காமல் ஷேவிங் செட்டை எடுத்துச் செல்லச் செய்யுங்கள். மற்றவர் உபயோகிப்பதை உங்கள் கணவர் உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அதேபோல் கணவர் உபயோகிப்பதை வேறு யாருக்கும் தராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது பல சரும வியாதிகளையும், தொற்று நோய்க் கிருமிகள் பரவுவதையும் தடுக்கும்.
* ஆண்களுக்கு வெளியில் செல்லுவதால் தலையில் அழுக்கு அதிகமாகப் படியும். உங்கள் கணவருக்காகத் தனியே தலை வாரும் சீப்பு வைக்கவும். இதையும் அடிக்கடி சுத்தம் செய்து வையுங்கள். பெண்ணைப் போலவே ஆண்களும் ஆயில் மசாஜ், எலுமிச்சை சாறு, புளித்த தயிர் போன்றவற்றைத் தலையில் தேய்த்து ஊறியபின் குளிக்கலாம். விடுமுறை நாட்களில் உங்கள் கணவரை இவ்வாறு செய்யச் சொல்லலாம். பொடுகுத் தொல்லை ஆண்களுக்கு சகஜம். நல்ல ஷாம்புவை உபயோகிக்க வைக்கலாம்.
சில ஆண்களுக்கு இளவயதிலேயே பித்த நரை தோன்றி, நரைத்த முடியுடன் இருப்பார்கள். இவர்கள் தரமான ஹெர்பல் ஹேர் டை உபயோகிக்கலாம். ஆனால், சில பேருக்கு டை போட்டால் அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. இதுபோல் இருப்பவரை டை போடும்படி வற்புறுத்த வேண்டாம்.
*மாதத்தில் ஒருநாளாவது உங்கள் கணவரின் உடைகளை ‘செக்’ செய்து பட்டன் உடைந்த ஷர்ட்டில் பட்டன் தைத்து வைக்கவும். சில வீடுகளில் கால நேர அவசரத்தில் பட்டன் இல்லாத ஷர்ட்டால் சண்டையே ஏற்படும்.
*கணவர் உபயோகிக்கும் காலணிகளை மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்து வெயிலில் சிறிது நேரம் வைக்கவும்.
* முக்கியமான விஷயம் உங்கள் கணவரின் படிப்பு, வேலை வசதி, பண வரவு எதையும் அடுத்தவருடன் ‘கம்பேர்’ செய்து பேசாதீர்கள். உங்கள் கணவரின் வசதிக்கேற்ப குடும்பம் நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
* கணவரின் உறவினர் வீட்டு விசேஷங்களில் முழு மனதோடு கலந்து கொள்ளுங்கள். அங்கும் சென்று அவர்களிடம் உங்கள் கணவரைப் பற்றிப் புகார் செய்யாதீர்கள். “எனக்கு நேரம் இல்லை. தலைகாட்டி விட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்று பிகு செய்து 10 அல்லது 15 நிமிடம் மட்டும் இருப்பேன் என்று உறவினர்களிடம் சொல்லாதீர்கள்.
வயதான மாமனார், மாமியார் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள். உங்களுக்கும் வயதாகும் ஒருநாள். அப்பொழுது மற்றவர் உதவி வேண்டும். உங்களுக்கும் கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் எப்பொழுதும் எந்தப் பிரச்னையையும் பெரிதாக்கி கணவரிடம் புகார் செய்து வீட்டில் அமைதியைக் கலைத்துவிடும் மனைவியாகச் செயல்படாதீர்கள்.
*வேலைக்குச் செல்லும் மனைவியோ அல்லது இல்லத்தரசியோ என்றாலும் கணவருக்குப் பிடித்த உணவை மாதத்தில் சில நாட்களாவது செய்யவும். ‘எனக்காகச் செய்தாள்’ என்ற அவரின் பெருமிதம் குடும்ப உறவில் எவ்வளவோ அழகாகப் பிரதிபலிக்கும். சாப்பிடும் நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாகச் சாப்பிடுங்கள். டீ.வி. பார்த்துக்கொண்டும், குடும்பப் பிரச்னைகளைப் பேசிக்கொண்டும் சாப்பிடாதீர்கள். எப்பொழுதும் சுத்தமான ஆடையுடன், பளிச்சென்ற புன்னகை முகத்துடன் இருங்கள். எதையும் பாஸிடிவ் ஆக எடுத்துக் கொள்ளுங்கள். கணவர் ‘சர்ப்ரைஸ்’ ஆக வாங்கித் தரும் புடைவை பிடிக்கவில்லை என்று குறை சொல்லாதீர்கள்.