

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வருக்கு அருகில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோயிலில் வழங்கப்படும் மகா பிரசாதம் “சப்பன் போக்” என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் தினமும் 56 வகையான பிரசாதங்கள் பகவானுக்கு நைவேத்யம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தில் தினமும் எட்டு வேளை உணவினை சாப்பிட்டார். அவருடைய தாயார் யசோதா தினமும் எட்டு வேளை அவருக்கு உணவளிப்பார். எட்டு வேளையும் வெவ்வேறு உணவுகளை அளிப்பார். ஸ்ரீகிருஷ்ண பகவான் ஏழு நாட்கள் தொடர்ந்து உணவு ஏதும் அருந்தாமல் கோவர்த்தன மலையை தாங்கிப்பிடித்து பிருந்தாவனவாசிகளை பெரு வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் தவிர்த்த ஏழு நாட்களுக்கான எட்டு வேளை உணவினை ஈடுசெய்ய பக்தர்கள் கிருஷ்ணரின் அவதாரமான ஜெகந்நாதருக்கு தினமும் 56 வகையான உணவினை நைவேத்யம் செய்து பகவானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மகா பிரசாதமாக வழங்குகிறார்கள்.
ஒடிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே ஸ்ரீஜெகந்நாதர் கோயிலில் விஷ்ணு பகவான் ஸ்ரீஜெகந்நாதராக அவருடன் சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.
அரிசி, பருப்பு, நெய், சர்க்கரை, காய்கறிகள், பழங்கள், பால் முதலானவற்றைக் கொண்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. வெங்காயம் மற்றும் பூண்டு முதலானவை அறவே தவிர்க்கப்படுகின்றன. கோயிலில் பிரசாதங்களை செய்பவர்கள் "சுவராஸ்" என்று அழைக்கப்படுகிறார்கள். ஜெகந்நாதர் கோயிலில் உள்ள மிகப்பெரிய சமையலறையான ரோசாகராவில் மண் பானைகள் மற்றும் விறகுகளைப் பயன்படுத்தி பாரம்பரியமான முறையில் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தினம் தினம் புதிய மண்பானைகள் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மண்பானை மற்றொரு முறை பயன்படுத்தப் படுவதில்லை. இதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் கோயில் வளாகத்தில் உள்ள கங்கா மற்றும் யமுனா எனும் இரண்டு கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு சமைக்கப்படுகிறது. இதில் என்னவொரு விசேஷம் என்றால் அடியில் உள்ள மண்பானையில் உள்ள உணவு வேகுவதற்கு முன்னால் மேல் உள்ள மண் பானை உணவு வெந்துவிடும் அதிசயமும் இங்கே நிகழ்கிறது. இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதமானது கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆனந்த பஜார் என்ற பகுதியில் பக்தர்களுக்கு பரிமாறப்படுகிறது.
தினந்தோறும் அதிகாலை முதல் இரவு வரை ஆறுமுறை ஜெகந்நாதருக்கு நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன. ஜெகந்நாதர், விமலாதேவி மற்றும் பிற தெய்வங்களுக்குப் படைத்து பக்தர்களுக்கு விநியோகிக்க ஆனந்தபஜாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பூரி ஜெகந்நாதருக்கு நைவேத்யம் செய்யப்படும் 56 பிரசாதங்களில் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளுவோம்.
புளித்த சாதத்தில் தண்ணீர், தயிர் முதலானவற்றைக் கலந்து தயார் செய்யப்படும் பிரசாதம் “பகலா பட்டா”, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் கலந்து தயாரிக்கப்படும் “டால்மா”, அரிசி மற்றும் பாசிப்பருப்பை உபயோகித்து தயாரிக்கப்படும் “கெச்சுடி”, வறுத்த பச்சை இலை மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் “சாகா பஜா”, பழங்கள், பச்சை இலை காய்கறி உணவான “சாக்”, தேங்காய், கடுகு விழுதைக்கொண்டு தயாரிக்கப்படும் “பெசார்”, கத்திரிக்காய், பூசணி, அவரை, இனிப்பு உருளைக்கிழங்கு, போதி எனும் வேர் காய்கறி, பருப்புகள், தேங்காய் முதலானவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் “தலமா”, உளுத்தம்பருப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரி தாலி, மாம்பழம், ஆப்பிள், திராட்சை முதலானவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புளிப்பு சுவை கொண்ட “கட்டா”, அரிசி மாவு மற்றும் தேங்காய் கொண்டு தயாரிக்கப்படும் “பிதா”, கோதுமை மாவு மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் “காஜா”, மைதா அல்லது கோதுமை மாவு, வாழைப்பழம், பால் மற்றும் சர்க்கரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் “மால்புவா”.
நடியா கோரா எனப்படும் தேங்காய் லட்டு, பாலாடைக்கட்டி, சர்க்கரை, ஏலக்காய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் “சேனா பேடா”, கோதுமை, நெய் கொண்டு தயாரிக்கப்படும் “ககாரா” எனும் இனிப்பு, பால், கோதுமைமாவு, ரவை, சர்க்கரை முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் “ரசபாலி” எனும் இனிப்பு, கோதுமை, நெய் மற்றும் சர்க்கரை பயன்படுத்தி செய்யப்படும் “ஜகன்னாத் பல்லவ்” எனும் இனிப்பு, பனீர், பால், சர்க்கரை கொண்டு செய்யப்படும் “சரபுலி” எனும் இனிப்பு, அரிசி, சர்க்கரை, வெண்ணெய் கொண்டு செய்யப்படும் “கனிகா” எனும் இனிப்பு சாதம், வேப்பம் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் “பிடா”, சுரைக்காய், தேங்காய்ப் பால் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் “பொட்டாலா ரசா” முதலான 56 வகையாக பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன.