கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் உள்ளது ஸ்ரீதாணுமாலயன் திருக்கோயில். இந்தக் கோயிலின் தனித்துவம் என்னவென்றால், முப்பெரும் தெய்வமான சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மதேவன் ஆகிய மூவரும் ஒன்றாக அருள்பாலிப்பதேயாகும். அதனால் இக்கோயில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இக்கோயில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைவதற்கு முன்னால் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்துடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதாணுமாலயன் கோயில் கட்டடக் கலையில் பிரசித்தி பெற்றதாகும்.
இந்தக் கோயில் ஏழு அடுக்குகளோடுகூடிய வெள்ளை கோபுரத்தைக் கொண்டதாகும். 134 அடி உயரம் கொண்ட இக்கோயில் கோபுரம் தென் இந்திய கட்டடக்கலையின் அழகை பறைச்சாற்றுகிறது என்று கூறலாம். கோயிலின் வலது பக்கத்தில் பெரிய குளம் உள்ளது. இக்கோயிலுக்கு மேலும் சிறப்பூட்டுவதாக உள்ளது 18 அடி உயரம் கொண்ட இசை தூண்கள். இந்தத் தூண்களை ஒற்றை கருங்கல்லில் செதுக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தூண் கோயிலில் அலங்கார மண்டபத்தின் அருகே அமைந்துள்ளது. காற்று இத்தூணின் மீது வந்து படும்போது காற்றின் அழுத்ததிற்கு ஏற்றாற்போல இசை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, இக்கோயிலில் இன்னும் 1035 அழகிய வேலைப்பாடுகள் கொண்ட செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன.
இக்கோயிலில் அருளும் ஆஞ்சனேயர் மிகவும் பிரசித்தி பெற்றவராவார். 22 அடி உயரம் கொண்ட இந்த ஆஞ்சனேயரின் சிலையை பார்த்து பிரமிக்காத பக்தர்களே இருக்க முடியாது. இந்த சிலையை ஒற்றை கருங்கல்லை கொண்டு செதுக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சமயம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும் தேவி அனுசுயாவின் கற்பை சோதிக்க யாசகம் கேட்பவர் போல உருவத்தை மாற்றி கொண்டு யாசகம் வேண்டி வந்தனர். அதோடு அவர்கள் தங்களுக்கு யாசகம் கொடுக்க வேண்டுமாயின் ஆடைகளின்றிதான் அதைத் தர வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தனர்.
கற்புக்கரசியான அனுசுயா கமண்டலத்தில் இருந்த நீரை மும்மூர்த்திகள் மீதும் தெளிக்க, அவர்கள் பச்சிளம் குழந்தைகளாக மாறினர். பின்பு அவர்கள் கேட்டது போலவே ஆடைகளின்றி அக்குழந்தைகளுக்கு உணவை வழங்கினார். இதைப் பார்த்த மும்மூர்த்தியர் தேவியரும் தங்கள் கணவன்மார்களை பழைய ரூபத்திற்கு மாற்றும்படி கேட்டனர். அப்படியே மாற்றிய அனுசுயா அவர்களை அங்கேயே சுயம்புவாக இருக்கும்படி வேண்டினாள். அவளது வேண்டுதலை ஏற்று முப்பெரும் கடவுளரும் அங்கேயே கொன்றை மரத்தின் அடியிலே சுயம்பு லிங்கமானார்கள் என்று கூறப்படுகிறது. 2500 வருடம் பழைமையான அத்தல விருட்சம் இன்றும் இக்கோயிலில் உள்ளது.
கன்னியாகுமரிக்கு வருகை தருபவர்கள் அவசியம் இக்கோயிலில் அருளும் முப்பெரும் தெய்வ மூர்த்தமாக விளங்கும் ஸ்ரீதாணுமாலயனின் அருள் பெற்றுச் செல்வது சிறப்பு.