விநாயகப்பெருமானின் தத்துவ விளக்கம் தெரியுமா?

விநாயகப்பெருமானின் தத்துவ விளக்கம் தெரியுமா?

Kalki vinayagar
Kalki vinayagar

‘விநாயகர்’ என்ற சொல்லில், ‘வி’ எனும் எழுத்துக்கு இல்லாமை எனப் பொருள். ‘நாயகன்’ எனும் சொல்லுக்கு தலைவன் என அர்த்தம். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லை என்பதே விநாயகர் என்பதன் பொருள். அதேபோல், கணங்களுக்கு எல்லாம் பதி, அதாவது தலைவர் என்பதால் இவர் கணபதி என்று அழைக்கப்படுகிறார்.

யானை தலை, கழுத்துக்குக் கீழே தேவ உடல், மிகப்பெரிய தொந்தி, நான்கு கைகள், வளைந்த துதிக்கை, கையில் மோதகம், பாசம், அங்குசம், இந்தப் பெரிய உருவத்தை தாங்கும் சிறிய வாகனமாக மூஞ்சுறு - இப்படியான ஒரு கலவைதான் விநாயகப்பெருமான் திருவுருவம். இந்த உடலமைப்பு உலகின் அனைத்து உயிர்களிலும் தாம் கலந்து இருக்கும் தத்துவத்தைக் குறிக்கிறது. படைத்தல் தொழிலை பாசம் ஏந்திய திருக்கரமும், அழித்தலை அங்குசம் ஏந்திய திருக்கரமும், அருளை மோதகம் ஏந்திய திருக்கரமும், மறைத்தலை தும்பிக்கையும் குறிக்கின்றன.

மொத்தத்தில், ‘ஓம்’ எனும் தத்துவப்பொருளின் அடையாளமாகவே விநாயகப்பெருமான் விளங்குகிறார். ஆகவேதான், ‘ஓம் பிரணவானன தேவாய நம’ என்பது கணபதியின் மந்திரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை கணநாதன் கணபதியின் மூன்று கண்களாகத் திகழ்கின்றன. பக்தர்களின் குறைகள் ஒன்று விடாமல் விரிவாகக் கேட்டு நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காகவே அகண்ட பெரிய செவிகள். அண்டங்களை எல்லாம் தம்முள் அடக்கியவர் விநாயகப்பெருமான் என்பதை இவரது பெருத்த வயிறு குறிக்கிறது. இவரது திருப்பாதங்கள் பக்தர்கள் வாழ்வுக்கு நல்வழி காட்டும் என்பதை விளக்கும் தத்துவப் பொருளாகவே கணபதியின் திருவுருவம் விளங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com