திருவண்ணாமலை அஷ்ட லிங்க அருள் தெரியுமா?

திருவண்ணாமலை அஷ்ட லிங்க அருள் தெரியுமா?

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. மலையே வடிவாக சிவபெருமான் அருளும் இத்திருத்தலத்தில் அருளும் உண்ணாமுலையம்மை சமேத அண்ணாமலையாரை ஒவ்வொரு பௌர்ணமியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகிறார்கள். 14 கி.மீ. தொலைவு அமைந்துள்ள இந்த கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்க ரூபமாக சிவபெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த அஷ்ட லிங்கங்களை வழிபடும் பக்தர்கள் தாங்கள் வேண்டும் விதவிதமான பலன்களைப் பெற்று வாழ்வில் உயர்வது கண்கூடு. இனி, அஷ்ட லிங்கப் பலன்களைக் காணலாம்.

1. இந்திர லிங்கம்: இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சிவலிங்கத்தை வழிபட, பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் உண்டாகும்.

2. அக்னி லிங்கம்: அக்னி பகவான் ஸ்தாபித்த இந்த லிங்கம், தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இப்பெருமானை வழிபட, வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்கள் அனைத்தும் அகலும்.

3. எம லிங்கம்: எமதர்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம், தெற்கு திசையை நோக்கியுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு உட்பட்ட இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் வாழ்வில் பண நெருக்கடி இன்றி சந்தோஷமாக வாழலாம்.

4. நிருதி லிங்கம்: ராகு பகவானால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது. இந்த சிவலிங்கத்தை வேண்டி வழிபடும் பக்தர்கள் வாழ்வில் பிரச்னைகளின்றி நிம்மதியாக வாழ்வர்.

5. வருண லிங்கம்: வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த சிவலிங்கம். மேற்கு திசையை நோக்கி இப்பெருமானை வழிபட, சமூகத்தில் நற்பெயரும், முன்னேற்றமும், கொடிய நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

6. வாயு லிங்கம்: வாயு பகவானால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தை வழிபட, இதயம், வயிறு, நுரையீரல் மற்றும் பொதுவான உடல் நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

7. குபேர லிங்கம்: செல்வத்துக்கு அதிபதி குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த சிவலிங்கம். வடக்கு திசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குரு பகவானை ஆட்சி கிரகமாகக் கொண்டு உள்ளது. பக்தர்கள் செல்வச் செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்கிறார்கள்.

8. ஈசானிய லிங்கம்: ஈசானிய தேவரால் நிறுவப்பட்ட இந்த சிவலிங்கம் வடகிழக்கு திசையை நோக்கி உள்ளது. புதன் கிரக ஆட்சிக்குட்பட்ட இந்த சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபட்டால் மன அமைதியோடு, அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com