அமானவன் யார் என்பது தெரியுமா உங்களுக்கு?

அமானவன் யார் என்பது தெரியுமா உங்களுக்கு?
Published on

‘அமானவன்' – ‘இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதில்லையே என நினைக்கிறீர்களா? இது கடவுளின் பெயரோ அல்லது புராண இதிகாசத்தில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயரோ அல்ல. இவனைப் பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் ஒருவரின் இறப்புக்குப் பின்னரே இவனைப் பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம். வைகுண்டத்தில் பெருமாளின் இருப்பிடத்துக்கு முன்பு துவாரபாலகர்கள் இருப்பார்கள்.

பெருமாள் கோயில்களில் ஜயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக கருவறைக்கு முன்பு பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான்.

‘சரி, இவனுக்கு வைகுண்டத்தில் என்ன வேலை’ என நினைக்கிறீர்களா? நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம். 'ஹரி... ஹரி... நாராயணா... கோவிந்தா... பத்மநாபா' என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம்.

எந்நேரமும் பிறரது நலம் பற்றியே நீங்கள் சிந்திப்பவராக இருக்கலாம்… என்ன கஷ்டம் வந்தாலும், ‘பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே... இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்’ என பாசிட்டிவ்வாக நினைக்கலாம். மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடலாம்.

இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, அவர்கள் வைகுண்ட வாசலுக்குச் செல்வார்கள். அங்கே அவர்களுக்காக அமானவன் காத்திருப்பான். அவர்களைக் கண்டதும், அவர்களது கையைப் பிடித்து பெருமாளிடம் அழைத்துச் செல்வான். அமானவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள். மேலும் அமானவன், அவரை பெருமாள் முன்பு நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்கச் செய்வான்.

இவனுக்கு ஏன் அமானவன் எனப் பெயர் வந்தது தெரியுமா? 'மானவன்' என்றால் மனிதன் எனப் பொருள். 'அமானவன்' என்றால் மனிதன் அல்லாதவன் என அர்த்தம். அதாவது, தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது பணி. அதனாலேயே, 'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள். அதாவது, 'அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்கிறார். நாமும் நம் கைகளையும் அமானவன் பிடிக்க இன்றே நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து பெருமாளை வழிபடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com