பூஜையின்போது கற்பூரம் ஏன் ஏற்றப்படுகிறது தெரியுமா?

பூஜையின்போது கற்பூரம் ஏன் ஏற்றப்படுகிறது தெரியுமா?

ந்து மத சம்பிரதாயங்களில் பூஜைகளின்போது சுவாமியை வழிபட கற்பூர தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. சுவாமிக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுவதில் ஒரு மிகப்பெரிய தத்துவம் ஒளிந்து உள்ளது. கற்பூரம் என்பது ஹைட்ரோகார்பனால் ஆன ஒரு பொருளாகும். இதை எரிக்கும்போது அது வெளிச்சம் தந்து, மிச்ச நிலைக்குச் செல்லாமல், நேரடியாக வாயு நிலைக்கு பதங்கமாதல் எனும் நிலைக்குச் சென்று மறைந்துவிடும்.

அதைப்போலவே, மனிதனும் வாழ்க்கை எனும் வெப்பச் சூட்டில் தகிக்கையில், மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டி எனும் வெளிச்சத்தைத் தந்து, அதன் மூலம் இப்பிறப்பின் மிச்ச சொச்சம் ஏதும் இல்லாமல், இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவ நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இறை வழிபாட்டில் கற்பூரம் ஏற்றப்படுகிறது. மேலும், ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போலவே, பரப்பிரம்மத்துடன் நமது ஜீவனும் கரைந்து இரண்டற கலக்க வேண்டும் எனும் உண்மையை உணர்த்தவே, கற்பூர தீப ஒளியைக் கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்கிறோம்.

வெண்மை நிறம் கொண்ட தூய கற்பூரம் தீப்பட்டவுடன் கொழுந்துவிட்டு எரிந்து இறுதியில் காணாமல் போவதைப் போலவே, சுத்த தத்துவ குணம் கொண்ட மனம் படைத்தோரின் ஆன்மாவானது, இறை சிந்தனை எனும் ஞானாக்னியைத் தொட்டவுடன், மோட்சகரணம் பெற்று இறைவனின் திருப்பாதத்தை சேர்கிறது என்பதை விளக்கவுமே கற்பூரம் பூஜைகளின்போது ஏற்றப்படுகிறது என்பதை உணர வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கப்படும் கற்பூரக் கட்டிகள் ரசாயனக் கலப்போடு இருப்பதால் அவற்றைப் பெரும்பாலும் கோயில்களில் ஏற்ற அனுமதிப்பதில்லை. ரசாயனக் கலப்பில்லாத கற்பூரங்கள் சில நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பூஜைக்குப் பயன்படுத்தி இறைவனின் பேரருளுக்குப் பாத்திரமாகலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com