

சென்ற தலைமுறையில் கோயில்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களை தீர்த்த யாத்திரை செல்வதாக சொல்வர். பிரபலமான நதிகளில், குளங்களில், ஆறுகளில் குளிப்பதை பெரும் பேறாக கருதுவர். உதாரணமாக கங்கை, காவிரி, பிரம்மபுத்திரா, கோதாவரி, யமுனை, போன்ற நதிகளில் நீராடுவதை சடங்காகவே கருதுகின்றனர்.
கர்நாடகத்தில் கோயில் சார்ந்த குளங்களை கல்யாணி எனவும், ஆந்திராவில் புஷ்கரணி எனவும் அழைக்கின்றனர். மன்னர்கள் காலத்தில் கோயிலுக்கு உதவும் குளங்கள் வெட்டிக் கொடுத்தால் அவருக்கு வரிவிலக்கு உண்டு. மேலும் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் கருதினர்.
இந்து மதத்தில் ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம், என்பது மிகவும் முக்கியமானது. கும்பகோணத்தில் பல கோயில்களுக்கு சொந்தமான குளங்கள் உள்ளன.17குளங்கள் உள்ளதாக அறிகிறோம். இவற்றில் மகாமக குளம் மிகவும் பிரபலம். மாசி மகத்தன்று குளிப்பது பெரும் பேறாக கருதப்படுகிறது.
திருப்பதியில் குளத்தை புஷ்கரணி என்ற பெயரில் அழைப்பர். திருவிழாவின்போது இறைவனுக்கு தீர்த்தவாரி நடக்கும். திருப்பதியில் 17குளங்கள் உள்ளன. இவற்றில் சக்கர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சப்தகிரி தீர்த்தம், கபிலர் தீர்த்தம், ஆகாச கங்கை பிரபலமாக இருப்பவை.
காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரத்தில் உள்ளவற்றை சிவகங்கை என அழைப்பர். தீர்த்தங்களில் தெப்பத் திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. திருவாரூர் கமலாலய தெப்பம், மதுரை மாரியம்மன் தெப்பம், திருச்சி தாயுமானவர் தெப்பம், காஞ்சி மற்றும் பல கோயில்களின் தெப்போற்சவம் சிறப்பாக கருதப்படுகிறது.
திருவாரூர் குளத்தை கமலாலயம் எனவும், தஞ்சை மாரியம்மன் குளத்தை அமிர்த புஷ்கரணி எனவும், செம்பணார் கோவில் ஆண்டவர் குளத்தை புஷ்கரணி எனவும் கேரளாவில் திருச்சானூர் குளத்தை பத்ம சரஸ் எனவும் அழைப்பர். சில குளங்களின் நடுவில் நீராழி மண்டபம் இருப்பதைக் காணலாம். இதில் பொதுவாக 4-16 தூண்கள் இருக்கும். கர்நாடகாவில் உள்ள கோகர்ணாவில் உள்ள ராமர் தீர்த்தம் மிகவும் பிரபலம்.
நந்தி, பட்சி, சங்கு, அக்னி, ராமர் மற்றும் சரவண தீர்த்தம் என்ற பெயர்களில் உள்ள தீர்த்தங்கள் விசேஷமாக கருதப்படுகிறது. வருடத்தில் ஒரு முறையாவது இந்த தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட்டு மேன்மை அடைவோம்.