

சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்பவர்கள் இருமுடி கட்டிக் கொண்டு செல்வது வழக்கம். இதில் அவர்கள் ஐயப்பனுக்குப் படைப்பதற்காக நெய் தேங்காய் எடுத்துச் செல்வார்கள். ஐயப்பன் கோவிலுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு இது. அங்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும். அதை தனியாக நிவேதனம் செய்யாமல் நெய் ஊற்றிய தேங்காயையே நிவேதனம் செய்வார்கள்.
நெய் தேங்காய் என்பது சுவாமி ஐயப்பனை சரணடைவதை குறிப்பதாகும். அதாவது நெய் தேங்காயின் வெளிப்பகுதி மனிதர்களின் பூத உடலைக் குறிக்கும். தேங்காயில் ஊற்றப்பட்ட நெய்யானது நம்முடைய உடலை இயக்கும் உயிரைக் குறிக்கும். தேங்காய் என்பது பரிசுத்தமான பொருளாகக் கருதப்படுகிறது. மற்ற பழங்கள் காய்கறிகளில் பறவைகள் பூச்சிகள் என ஏதாவது ஒரு உயிரினத்தின் எச்சம் பட்டிருக்கும்.
ஆனால் தேங்காயோ வெளியில் கடினமான மட்டையால் பாதுகாக்கப் பட்டு கால்படும் இடத்தில் இல்லாமல் உயரமான இடத்திலேயே விளைகிறது. இது மனிதனுடைய ஆத்மாவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது நெய் என்பது மகாலட்சுமிக்கு இணையாகவும், முப்பத்து முக்கோடி தேவதைகள் வசிக்கும் பசுவின் பாலிலிருந்து கிடைப்பதால் தெய்வீகத் தன்மை கொண்டது.
நெய் தேங்காய்
முக்கண் கொண்டு தேங்காய் சிவனை ஞாபகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை ஞாபகப்படுத்தும். சிவன் விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் சக்தியாக அவதரித்தவர் ஐயப்பன். இதனால் சிவாவிஷ்ணு வடிவமான நெய் தேங்காயை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர்.
நெய் எதற்காக?
ஐயப்பனுக்கு காணிக்கையாக நெய் கொண்டு செல்வது காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?. பந்தள மன்னனின் மனைவி வயிற்றுவலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அதற்கு மருந்தாக புலிப்பால் கொண்டுவர காடு நோக்கி புறப்பட்டார் ஐயப்பன். தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது , காட்டில் இருக்கும்போது உண்ணக்கூடிய உணவுகள் பலநாட்கள் கெட்டுப் போகாமலிருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாக கட்டினார். அதே சமயம் சிவபக்தனான பந்தள மன்னன் சிவனின் அம்சம் போன்ற ஒரு தேங்காயை மற்றொரு முடியாக கட்டிக்கொடுத்தார்.
அந்த இரு முடிகளையும் ஏந்திய மணிகண்டன் புலிப்பால்கொண்டு வர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதல் முதலாக தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு இரு முடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறை நாளடைவில் நிலைத்துவிட்டது.
கொண்டு செல்லும் நெய்யை என்ன செய்வர்
சபரிமலை ஐயப்பன் சிலை 1800ம் ஆண்டுவரை தாரு சிலை எனப்படும் மரத்தில் செய்யப்பட்ட சிலையாக தான் இருந்தது. அதன் காரணமாக சுவாமிக்கு நேரடியாக நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய்யை அங்குள்ள நெய்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது தற்போது நேரடியாக நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர்.
இரு முடியில் நெய் தேங்காய் சுமந்து செல்வதற்கான காரணம்
தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால்தான் சபரிமலையில் தவம் இருக்கப் போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறு ஐயப்பன் கூறினார். பந்தள மன்னன், மணிகண்டா நீ காட்டுக்குள் குடியிருக்கும் போவதாக சொல்கிறாய். நாங்கள் உன்னைக் காணவேண்டுமென்றால் மலைகளைக் கடந்து வர வேண்டும். வயதான நான் உன்னை எப்படி காண வருவேன் என்றார் அதற்கு மணிகண்டன் ஒரு கருடன் வழிகாட்டும் அந்த வழிகாட்டுதல்படி நீங்கள் என் இடத்திற்கு வந்து விடலாம் என அருள் பாலித்தார்
அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக்காண பந்தள மன்னன் மலைக்குச் செல்வார். ஐயப்பனுக்குப் பிடித்ததெல்லாம் எடுத்துச் செல்வார். நெய் இலகுவில் கெட்டுப் போகாத ஒன்று.
மேலும் நெய்யை தேங்காய்க்குள் ஊற்றிக்கொண்டு சென்றால் பலநாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன் ஐயப்பனைக் காண நடந்தே செல்வார். மலையை அடைய பல நாட்கள் ஆகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச்செல்லும் வழக்கம் உருவானது. ஐயப்பனிடம் நம்முடைய உயிர், உடல், ஆன்மா, வாழ்க்கை என சகலத்தையும் ஒப்படைத்து பூரண சரணாகதி அடைவதே நெய் தேங்காய் கொண்டு செல்லும் ரகசியமாகும்.