சாப விமோசனம் பெற இந்திரன் வழிபட்ட தலம்!

Melapappuvur Meenakshi Sundareswarar
Melapappuvur Meenakshi Sundareswarar

மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய இவ்வூர் மன்னு பெரும்பழுவூர் என்று அழைக்கப்படும் பெருமையை உடையது. சாபம் நீங்குவதற்காக இந்திரன் மதுரையில் தவம் செய்தபோது அசரீரி இந்த ஊருக்கு வரும்படி கூறியதால் இந்திரன் வந்து இத்தல இறைவனை வணங்கி சாப விமோட்சனம் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலம் ஜமதக்னி ரிஷி வழிபட்ட பெருமையுடையதென்றும், தாயைப் கொன்ற பரசுராமரின் பாவம் நீங்கிய வகையில் பரசுராமர் தீர்த்தம் பெற்ற தலமென்றும் கூறுகின்றனர்.

இக்கோயில் சாலையிலிருந்து கீழே பள்ளத்தில் இறங்கி செல்வது போன்ற நிலையில் உள்ளது. இறங்கி சென்றதும் மூன்று நிலைகளுடன் உள்ள ராஜ கோபுரம் உள்ளது. கோபுரத்தின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம் உள்ளது.  இந்த மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன நந்தியம்பெருமான் எழுந்தருளியுள்ளார். அருகே பலிபீடம் உள்ளது.

மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவராக கருவறையில் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவத்தில் உள்ளார். மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வலது புறம் இருக்கும் துவாரபாலகருக்கு அருகே விநாயகர் உள்ளார்.  மூலவரான லிங்கத்திருமேனியைச் சுற்றி வரும் வகையில் சிறிய வழி அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளதைப் போன்று இக்கோயிலில் இந்த அமைப்பு உள்ளது.  

கோயிலின் திருச்சுற்றில் வலப்புறம் ஜமதக்னி ரிஷி, சூரியன்,  ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் சிற்பங்கள் உள்ளன. அகோரவீரபத்திரரும் நவகன்னியரான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரும் தனி சன்னதியில் உள்ளனர்.  அடுத்து தேவிகோட்டை கருமாரியம்மன் சன்னதி உள்ளது. அதற்கெதிராக சிங்கத் தூணின் பகுதி உள்ளது. அடுத்து கடன் நிவர்த்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன. அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

கோயிலின் திருச்சுற்றில் இடப்புறம் நவக்கிரகங்கள் உள்ளன. அடுத்து விநாயகர், உமாமகேஸ்வரர், இரு நாகர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, பைரவர் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கோடி அதிசயம் கொண்ட வில்லிபுத்தூர் கோபுர பெருமை தெரியுமா?
Melapappuvur Meenakshi Sundareswarar

 ஜேஷ்டாதேவிக்கு தனி சன்னதியில் உள்ளதால் வளர் பிறை அஷ்டமிதிதியில் வழிபட குழந்தைப் பேறும், நிறைந்த செல்வமும் உண்டாகும் என்ற நம்பிக்கையும், கஜலட்சுமியும் மகாவிஷ்ணுவும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் காணப்படுகிறது.

இக்கோயிலுக்கு அருகே உள்ள கீழப்பழுவூரில் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஆலந்துறையார் கோயிலும், கீழையூரில் முற்காலச் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரட்டைக்கோயிலும் உள்ளன. இந்த மூன்று கோயில்களுக்கும் ஒரே நாளில் சென்றோம். இவை இப்பகுதியில் காணவேண்டிய முக்கியமான திருத்தலங்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com