

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைந்ததா? அவர்களின் ஆசிர்வாதம் (Ancestors blessing) நமக்கு இருக்கிறதா? என்பதைச் சில முக்கிய அறிகுறிகள் மூலம் நாம் கண்டறியலாம்.
ஒரு குடும்பத்தைக் காக்கக்கூடிய முதன்மைத் தெய்வங்களாக அந்த வீட்டில் வாழ்ந்த பெரியவர் களையும், அதற்கடுத்ததாகக் குலதெய்வத்தையும் கருதுகிறோம். நீங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்து, குறிப்பிட்ட அந்த நாளுக்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ தடையின்றிச் சென்று தரிசனம் செய்துவிட்டால், உங்கள் முன்னோர்களின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம். மாறாக, குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும் திட்டம் ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தால், அவர்களின் ஆன்மா இன்னும் சாந்தியடையவில்லை அல்லது உங்கள் மீது ஏதோ ஒரு வருத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இரவில் எந்தவித அச்சமும் இன்றி நிம்மதியாகத் தூங்க முடிந்தால், பித்ருக்களின் ஆன்மா சாந்தியடைந்து உங்களை ஆசிர்வதிக்கிறது என்று பொருள். ஒருவேளை சரியாகத் தூங்க முடியாமல் கெட்ட கனவுகள் தோன்றுவதும், மனக்கலக்கமும் ஏற்படுகிறதென்றால், அவர்களின் ஆன்மா இன்னும் அமைதியடையவில்லை என்பதற்கான சமிக்ஞையாகக் கருதலாம்.
நமது சாஸ்திரத்தில் காகத்தைப் பித்ருக்களின் மறு உருவமாகவும், பல்லியை மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்தியதாகவும் கருதுகிறோம். துளசி, வாழை, மருதாணி போன்ற புனிதமான செடிகள் உங்கள் வீட்டில் செழிப்பாக வளர்ந்தால், முன்னோர்களின் ஆசி உங்களுக்கு உண்டு. மாறாக, பராமரித்தும் துளசி போன்ற புனிதமான செடிகள் காய்ந்து போய்க்கொண்டே இருந்தால், பித்ருக்களின் ஆன்மா சாந்தியடையவில்லை என்று சொல்லப்படுகிறது.
பித்ருக்களின் சாபம் இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாக உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்; அவை எளிதில் குணமாகாது. மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதோடு, வீணான பண நஷ்டங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைப்பேறு தள்ளிப்போவது அல்லது அதற்கான முயற்சிகளில் தடை ஏற்படுவது முன்னோர்களின் ஆசிர்வாதம் குறைவாக இருப்பதைக் குறிக்கும். இத்தகைய சூழலில் முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய திதி மற்றும் சடங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
பித்ருக்களின் ஆன்மா சாந்தியடைந்து அவர்களின் ஆசியைப்பெற கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்:
அவர்களின் பெயரில் ஏழைகளுக்குத் தயிர் சாதம் தானமாக வழங்கலாம்.
தினமும் காலையில் காகம் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
அவர்களுக்கான வருடாந்திரத் திதி மற்றும் அமாவாசை தர்ப்பணங்களைச் சரியாகச் செய்ய வேண்டும்.
நம் முன்னோர்கள் தெய்வங்களுக்குச் சமமானவர்கள். அவர்கள் காட்டிய வழியில் தர்மத்தோடு வாழ்வதும், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை (தர்ப்பணம், தானம்) முறையாகச் செய்வதும் நமது தலையாய கடமையாகும். மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் உங்கள் வாழ்வில் தென்பட்டால், பயப்படத் தேவையில்லை.
மனதார அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, உங்களால் முடிந்த எளிய தான தர்மங்களைச் செய்தாலே அவர்கள் குளிர்ந்து போவார்கள். அவர்கள் குளிர்ந்து ஆசி வழங்கினால், உங்கள் குடும்பத்தில் தடைகள் நீங்கி, செல்வமும் நிம்மதியும் தானாகவே வந்து சேரும்.