தீராத வினைகள் தீர்க்கும் காலபைரவர் அஷ்டமி விரதம்!


Kalabhairava
Kalabhairava
Updated on

வைகாசி மாத அஷ்டமிக்கு 'சதாசிவாஷ்டமி' என்று பெயர். அன்று இடப்பாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதம் இருப்பார்கள். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்த நாளில் குடை, செருப்பு, பானகம், தயிர்சாதம் முதலியவற்றை தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் எட்டாம் நாளான அஷ்டமி திதியே தேய்பிறை அஷ்டமி ஆகும். ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தேய்பிறை அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சித்திரை மாத தேய்பிறை அஷ்டமிக்கு ஸ்நாதனாஷ்டமி என்றும், வைகாசி தேய்பிறை அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி, ஆனி அஷ்டமிக்கு பகவதாஷ்டமி, ஆடி மாதத்திற்கு நீலகண்டாஷ்டமி, ஆவணி மாத அஷ்டமிக்கு ஸ்தானுஷ்டமி, புரட்டாசி மாத அஷ்டமிக்கு ஜம்புகாஷ்டமி, ஐப்பசி மாத அஷ்டமிக்கு ஈசானசிவாஷ்டமி, கார்த்திகை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும், மார்கழி அஷ்டமிக்கு சங்கராஷ்டமி, தை மாதத்திற்கு தேவ தேவாஷ்டமி என்றும், மாசி மாதத்திற்கு மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாத அஷ்டமிக்கு திரியம்பகாஷ்டமி என்றும் பெயர் வழங்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை மட்டுமல்ல தக்ஷிணாமூர்த்தியையும் வணங்குவதும் சிறப்பு.

தேய்பிறை அஷ்டமி என்பது சிவபெருமானின் அவதாரமான காலபைரவரை வழிபடுவதற்கு உரிய சக்தி வாய்ந்த நாளாகும். காலத்தை கட்டுப்படுத்தும் கால பைரவரை இந்த நாளில் வழிபட தீய சக்திகள் விலகுவதுடன், தடைபட்ட காரியங்களில் வெற்றியும், முன் ஜென்ம பாவங்கள், கடன் தொல்லைகள் மற்றும் காலத்தினால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என அனைத்தும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

தேய்பிறை அஷ்டமியின் சிறப்புகள்: 

*பிரம்மனின் அகந்தையை அடக்க சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்த நாள் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ஆகும். இதுவே 'கால பைரவாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது.

*அஷ்டலட்சுமிகளின் வழிபாடு: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். எனவே இந்த நாளில் பைரவரை வழிபட வீட்டில் செல்வ வளம் பெருகும். 

இதையும் படியுங்கள்:
வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டிய எண்ணெய் ரகசியங்கள்!

Kalabhairava

*சர்வதோஷ நிவர்த்தி: 

காலத்தின் அதிபதியான பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவதால் ஜாதகத்தில் உள்ள ராகு-கேது தோஷங்கள், ஏழரை சனி, அஷ்டம சனியின் தாக்கங்கள் குறையும்.

*பயம் நீங்கும்: 

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் என்று பொருள். எதிர்ப்புகளை தவிடு பொடியாக்கி, நமக்கு தைரியத்தையும் பாதுகாப்பையும் வழங்குபவர் இவர்.

*தேய்பிறை அஷ்டமி நாளில் மாலையில் அல்லது ராகு காலத்தில் பைரவருக்கு சிவப்பு நிற மலர்கள் சார்த்தி, மிளகு கலந்த சாதம் அல்லது தயிர் சாதம், எலுமிச்சம் பழ மாலை அல்லது வடை மாலை சாற்றி வழிபட நமது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

*பஞ்ச தீபம்: 

நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கொண்டு ஏற்றப்படும் விளக்கிற்கு 'பஞ்ச தீபம்' என்று பெயர். பஞ்ச தீபம் ஏற்றுவது மிகுந்த பலனைத் தரும்.

*கடன் தீரும்: 

பைரவரை இந்நாளில் வழிபட தீராத கடன் தொல்லைகள் நீங்குவதுடன் வறுமையும் நீங்கும். தொழிலில் வளர்ச்சியும், வியாபாரத்தில் லாபம் பெருகவும், தடையில்லாத வேலை வாய்ப்பு கிடைக்கவும் இவரை வழிபட வழி பிறக்கும்.

logo
Kalki Online
kalkionline.com