

மதுரை அழகர்கோயில் ஆடித்தேரோட்ட விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று தேர் இழுக்கின்றனர்.
மதுரை அழகர் கோயிலில் ஆடித்திருவிழாவுக்கான கொடியேற்றம் ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. விழாவின் 9ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. தேரை இழுக்கும் பணியை கோயிலுக்கு கிழக்கிலும், தெற்கிலும் உள்ள சில கிராமங்களை சேர்ந்த மக்கள் மேற்கொள்கின்றனர். தேரின் முதல் வடத்திற்கான மரியாதையை வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் பெறுகிறார்.
தேங்காய் உடைத்து தேரோட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தேரை இழுப்பதுடன், இளைஞர்கள் துண்டு வீசி ஆடிப்பாடி விழாவை கொண்டாடுகின்றனர்.
தேர் இழுக்கும் ஒவ்வொரு வடத்தாருக்கும் கோயில் சார்பில் 60 படி அரிசி உணவுக்காக வழங்கப்படுகிறது. நான்கு வடத்தாருக்கும் 8 முழமுள்ள நாகமடிப்பட்டு, கோயில் மரியாதையாக தரப்படுகிறது. ஜமீன்தார் வடத்தை சேர்ந்த மக்களுக்கு 5 தோசையும், 5 அரிசிப் பொங்கலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. விழாவுக்காக தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலில் தங்கியிருந்து கிடா வெட்டி விருந்து படைத்து உண்கின்றனர்.