மருதாணி இட்டுக்கொள்வது அழகுக்காக மட்டுமல்லாது, சில மருத்துவ குணங்களுக்காகவும்தான். மருதாணி இலை மிகச்சிறந்த கிருமி நாசினி. இது கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. அதை கைகளில் இட்டுக் கொள்ளும்போது கை நகங்களில் புண்கள் இருந்தால் அதைப் போக்குமாம். மருதாணி உடலில் உள்ள உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தி குளிர்ச்சி தரும். மருதாணி பூக்களைப் பறித்து தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்தால் நல்ல உறக்கம் வருமாம்.
ராமாயணத்தில் மருதாணி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீராமர், ராவணனை போரில் வென்று விட்டு வந்ததும் சீதா தேவி ஸ்ரீராமனிடம், "தாங்கள் இல்லாத நேரங்களில் எனது வருத்தத்தைப் போக்கியது மருதாணி செடிகள்தான்" என்று கூறுகிறாள். அதோடு மருதாணி செடியிடம், “என்ன வரம் வேண்டும். கேள். தருகிறேன். எனது கஷ்டங்களைக் கேட்டு உனது கிளைகள் அசைந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது" என்று சீதை கூற, "சீதையே, உனது முகத்தில் மகிழ்ச்சி தெரிகின்றது. உன்னைப்போல அனைத்துப் பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும்” என்றதாம் அந்த மருதாணி செடி.
அதைக்கேட்ட சீதா தேவி, “உன்னைப் பூஜிப்பவர்களும், உன்னைக் கைகளில் இட்டுக்கொள்பவர்களும் சகல நன்மைகளோடு மகிழ்ச்சியாக இருக்க வரம் தருகிறேன்” என்றாராம்.
அதனால்தான் திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் மற்றும் திருமணத்துக்கு வந்த அனைத்துப் பெண்களும் மருதாணி வைத்துக்கொள்ளும் பழக்கம் வந்ததாம். இப்போது அதை மெஹந்தி விழாவாக எல்லோரும் கொண்டாடுகின்றனர்.
மகாலட்சுமியின் அருள் பெற்ற மருதாணி இலைகளைக் கொண்டு மகாலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்து வழிபட்டால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்கிறது வேதம். வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மகாலட்சுமியை நினைத்து மருதாணி இட்டுக்கொண்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.