

இந்துக்களின் மிகவும் புனிதமான நதிகள் என்று கருதப்படுவது ஏழு நதிகளாகும். அவை கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகும். ஐந்தாவது புனித நதியாக நர்மதை இருக்கிறது. இது மத்திய இந்தியாவின் ஜீவநதி என்று அழைக்கப்படுகிறது. இந்திய வரைபடத்தில், வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரிக்கும் ஒரு கோடுபோல இந்நதி இருப்பதைக் காணலாம்.
மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்க்கண்ட் பீடபூமியில் தோன்றி சுமார் 1312 கிலோ மீட்டர் பயணித்து மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, குஜராத் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. புராணங்களின்படி அமர்க்கண்டகம் மலையில் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்த போது அவரது உடல் வியர்வையிலிருந்து உருவான நதி நர்மதா. இதனால் நர்மதையே ‘சிவனின் மகள்” என்றும் உடலில் வியர்வையில் இருந்த தோன்றியதால் “ஜடா சங்கரி” என்று அழைக்கப்படுகிறது.
நர்மதை என்றால் அமைதியையும், ஆனந்தத்தையும் அளிப்பவள் என்பது பொருள். புராணங்களின்படி நர்மதா நதி கங்கையை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்நதிக்கரையில் வாழும் மக்கள் கங்கை நதியைவிட நர்மதை புனிதமானது என்றும் கங்கையில் மூழ்கினால்தான் பாவம் நீங்கும் என்றும் ஆனால் நர்மதையே தரிசித்தாலே பாவம் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
நர்மதை நதி ஏழு கல்பகாலமாக எல்லா யுகங்களிலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவனதியாகும். இதனைப் பற்றிய தகவல்கள் கந்தபுராணம், வாயுபுராணம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற பல பழங்கால நூல்களின் நர்மதையின் பெருமைகள் விவரிக்கப்பட்டுள்ளனர். நதியின் ஆதிபெயர் “ரேவாநதி”ஆகும்.
மேலும் கோவில்களில் வலம் வருவது, மலைகளிலும் கிரிவலம் சுற்றுவதைப்போல நதிகளையும் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். நர்மதை நதிக்கு மட்டுமே அதன் பிறப்பிடமான அமர்கண்டத்திலிருந்து அது கடலில் கலக்கும் இடம் வரை நதியின் ஒரு கரையில் சென்று மறுக்கரை திரும்பி வரும் நர்மதா பரிக்ரமா (வலம் வருதல்) என்ற புனித யாத்திரை சிறப்பாக மேற்கொள்ளப் படுகிறது.
நர்மதையின் பெயரை உச்சரித்தாலே பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஜகத்குரு ஆதிசங்கர நர்மதா நதிக்கரையில் உள்ள குகையில்தான் தன் குருவான ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை தரிசித்து ஞானம் பெற்றார். மேலும் இங்கு கிடைக்கும் கற்கள் அனைத்தும் சிவனின் அம்சமாக கருதப்பட்டு “பானலிங்கம்” என்று வணங்கப் படுகின்றனர். கங்கையில் நீராடினால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை அந்த கங்கை நதியே தன்னுடைய பாவங்களை நீக்க நர்மதை நதியில் நீராடி தனது பாவங்களை போக்கிக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.
நர்மதா கரையில் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு காணப்படும் தேக்கு, செம்மரம், சால், மூங்கில் போன்றவை இமயமலையில் உள்ளவற்றைவிட உறுதிமிக்கதாக உள்ளன. இக்காடுகளில் 76 வகையான பாலூட்டிகள் மற்றும் வனவிலங்குகள் 276 வகையான பறவைகள் காணப்படுகின்றன. இதன் நீளம் 815 மைல். ஹிரான், டெண்டுல், பர்னா, கோலார், துதி, சக்கர், தேனி, ஷேர், சாகர், பர்ஹான், பஞ்ஜார் போன்றவை நர்மதையின் முக்கியமான துணை நதிகளாகும்.