புராணக் கதை: லக்ஷ்மணனின் ஸ்ரீராம பக்தி!

புராணக் கதை: லக்ஷ்மணனின் ஸ்ரீராம பக்தி!

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஸ்ரீராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர்  அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.

அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து, “ராவண, கும்பகர்ண வதத்தை விட, லக்ஷ்மணன், ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல்” என்றார். அதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க, ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல், “ஸ்வாமி எதை வைத்து அப்படிக் கூறினீர்கள். மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா?” என்று கேட்டார்.

அதற்கு அகஸ்தியர், “ராமா, எல்லாம் அறிந்தவன் நீ. ஆனால், ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலேயே கூற வேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்.  சரி நானே கூறுகிறேன். சபையோர்களே  ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர் புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. இந்திரனை விடுவிக்க, பிரம்மா, மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன், “இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அரிய வரங்கள் தர வேண்டும்” என நிபந்தனை வைத்தான்.

அவை: ‘பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும், அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்,  அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்று பிரம்மாவிடம் மூன்று அரிய வரங்களைப் பெற்று இந்திரனை விடுவித்தான். அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படிப்பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும்” என்று கூறி முடித்தார்.

அதைக்கேட்ட ஸ்ரீராமர், “ஸ்வாமி, லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது அவன் எந்த ஒரு மாதையும் (பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான்?” என்று கேள்வி எழுப்ப, அகஸ்தியர், ‘அனைத்தும் அறிந்தே கேள்வி கேட்கிறாயே… சரி சற்று பொறு. உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்” என்று கூறி, லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

சபைக்கு வந்த லக்ஷ்மணன், அண்ணன் ஸ்ரீராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பிறகு, ஸ்ரீராமர் தனது சந்தேகத்தைக் கேட்டார். “லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்க முடியுமா?” எனக் கேட்டார்.

லக்ஷ்மணர், “அண்ணா, உங்களுக்கு நினைவு இருக்கலாம். ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்தபோது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களைத் தவிர, வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. காரணம், அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன். அதனால்தான் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிந்தது.

அடுத்து, வனவாசத்தின்போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ரா தேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ரா தேவியிடம் ஒரு வரம் கேட்டேன். “அம்மா என் அண்ணன் ஸ்ரீராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது. இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது” என வேண்டிக் கொண்டேன். நித்ரா தேவியும் என் வேண்டுதலுக்கு செவிசாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால்தான் வனவாசத்தின்போது எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது.

இதையும் படியுங்கள்:
சுவர்ணலட்சுமியை வீட்டில் தங்கவைக்கும் சந்தனக்கட்டை!
புராணக் கதை: லக்ஷ்மணனின் ஸ்ரீராம பக்தி!

மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா, அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார். அந்த பலா, அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக் கொண்டேன்” என்று கூற, சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சரியமாகப் பார்க்க ஆஞ்சனேயர் அயர்ந்தே போனார்.

லக்ஷ்மணின் பக்தியை நினைத்து ஸ்ரீராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவிக் கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com