

கோவில்களுக்காக உருவாக்கப்படும் சிலைகள் செய்த உடனே கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை. அவற்றை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு 48 நாட்கள் தண்ணீரில் போட்டு வைப்பார்கள் அல்லது நெல் மற்றும் நவதானியத்தில் சிலையை மூழ்க வைப்பார்கள். பிறகுதான் பிராண பிரதிஷ்டை செய்து தினசரி பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். பல்வேறு ஆகம விதிமுறைகளை பின்பற்றி, அறிவியலும் ஆன்மீகமும் இணைந்த வழிமுறையில் அந்த சிலைகளுக்கு தெய்வீக ஆற்றலை ஏற்படுத்துகிறார்கள்.
சிலைகள் செய்து வந்ததும் அவற்றை 48 நாட்கள் தண்ணீரில் மூழ்கும்படி வைப்பார்கள். இவ்வாறு தண்ணீரில் மூழ்கி இருக்கும்பொழுது அந்த சிலையில் ஏதேனும் விரிசலோ, குறைபாடுகளோ இருந்தால் அந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் பாசி படிந்து இருக்கும். இதை வைத்து சிலையில் உள்ள தோஷத்தைக் கண்டறிந்து அவற்றை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யாமல் கோவிலின் மற்ற சன்னதிகளில் பிரதிஷ்டை செய்வார்கள்.
இதுபோல்தான் நெல் மற்றும் நவதானியத்தில் சிலையை முழ்க வைப்பதும். 48 நாட்கள் தானியங்களில் இருக்கும் போது, அந்த வெப்பத்தில் சிலையில் ஏதேனும் கீறலோ, வலிமையற்ற பகுதியோ இருந்தால் உடைந்து விடும்.
சிற்பிகள் சிலைகளை வடிக்கும் பொழுது சில சமயம் உளி தவறாக பட்டு லேசாக சேதம் அடைய வாய்ப்பு உண்டு. அப்படி சேதமடைந்த பகுதியை லேசாக இருக்கும் பட்சத்தில் ஒருவிதப் பசியை போட்டு ஒட்டி சரி செய்வார்கள். இவை மிக நுட்பமாக செய்யப்படும் பணியாகும். இருப்பினும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படக்கூடிய விக்கிரகங்களுக்கு தோஷம் எதுவும் இல்லாமல் இருப்பதற்காக அவற்றை தண்ணீர் அல்லது தானியங்களில் மூழ்க வைத்து ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டுபிடிப்பார்கள்.
தோஷமுள்ள சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட கெடுதல் நேரும் என்று ஆகம விதிகள் கூறுவதால் நம் முன்னோர்கள் இம்முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இப்படித்தான் நம் முன்னோர்கள் ஆகம முறை மற்றும் சிற்ப சாஸ்திர முறைகளின் படி வடிவமைக்கப்பட்ட சிலைகளை, சிலையில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, ஆகர்ஷண சக்தி உள்ள சிலைகளைப் பிராண பிரதிஷ்டை செய்து தினசரி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் மூலம் தெய்வீக ஆற்றலை ஏற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சிலைகளை கும்பிடும் பொழுது தான் நமக்கு வேண்டியது வேண்டியவாறு கிடைக்கும்.
முந்தைய காலங்களில் எல்லாம் சிலைகளை 48 நாட்கள் தண்ணீரிலும், 48 நாட்கள் தானியங்களிலும் வைத்து பிறகு 48 நாட்கள் துணியில் வைத்திருப்பார்கள். ராஜாக்கள், பிரபுக்கள், பெரும் செல்வந்தர்கள் தங்கத்தில் காசுகளில் சிலைகளை வைத்திருப்பார்கள். பிறகுதான் பிரதிஷ்டை செய்யப்படும்.
தெய்வ சிலைகளில் கண்திறப்பு நிகழ்ச்சி:
கும்பாபிஷேகத்திற்கு 2 நாட்கள் முன்பாக கண் திறப்பார்கள். இந்நிகழ்ச்சி நடைபெறும் வரை சிலையில் எந்த விதத்திலும் பின்னப்படாமல் பார்த்துக் கொள்வார்கள். உளியினால் சிற்பத்துக்கு கண்பார்வை வரச் செய்வார்கள். அதன் பிறகு அந்த தெய்வங்களுக்குரிய பீடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யப்படும்.