இழந்த சொத்து, சுகங்களை மீண்டும் அருளும் சிவாலயம்!

இழந்த சொத்து, சுகங்களை மீண்டும் அருளும் சிவாலயம்!

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் கடைவீதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் கிழக்கே உள்ளது அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் கருவறையில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார் பஞ்சமுகேஸ்வரர். ஐந்து முகங்களோடு லிங்க சொரூபராக அருள்பாலிக்கிறார் சிவபெருமான். சத்தியோஜாதம், அகோரம், தத்புரு‌ஷம், வர்மதேவம், ஈசானம் என்பவையே அந்த ஐந்து முகங்கள். திசைக்கு ஒன்று எனவும், ஆகாயத்தை நோக்கி ஒன்று எனவும் ஆக மொத்தம் ஐந்து முகங்களோடு இத்தல சிவபெருமான் தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சிவபெருமானுக்கு எதிரே தனிச் சன்னிதியில் 90 டிகிரி நேர்க்கோணத்தில் இத்தல இறைவி திரிபுர சுந்தரியின் சன்னிதி அமைந்துள்ளது. இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒருசேர தரிசிக்க முடியும். இந்த அமைப்பு அபூர்வமானது என்கிறார்கள் பக்தர்கள். நான்கு திருக்கரங்களோடு அருளும் அம்பிகையின் மேலிரு கரங்கள் சங்குகளை ஏந்தியிருக்க, கீழ் இரு கரங்கள் அபய, அஸ்த முத்திரையோடு காட்சி தருகிறாள்.

இக்கோயிலின் மகாமண்டபத்தில் ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜராஜேஸ்வரரை தரிசிக்கலாம். எதிரே நந்தியும், பலிபீடமும் விளங்க, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியோடு அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி ராஜராஜேஸ்வரியின் சன்னிதி அமைந்துள்ளது.

விச்ரவசுவுக்கு ராவணன், குபேரன் என இரு புத்திரர்கள். இருவரின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை வளர்ந்து இருவரும் யுத்தம் புரியும் அளவுக்கு அது வளர்ந்தது. யுத்தமும் நடந்தது. இதனால் குபேரனின் அனைத்து சொத்துக்களும், ஐஸ்வரியங்களும, புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன.

மனமுடைந்த குபேரன் மகாதேவரை ஆராதிக்க, அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மகாவிஷ்ணுவானவர் தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, ராவணனை யுத்தத்தில் சந்திப்பார். அப்போது ராவணன் தோற்கடிக்கப்படுவான். அதன் பின்பு உன்னிடமிருந்து பறிபோன புஷ்பக விமானம் உன்னை வந்தடையும்’ என்றது அந்தக் குரல்.

அதன் பிறகு குபேரன் காவிரியின் தென் கரையில் ஒரு ஆலயம் அமைத்து, இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். ராஜராஜேஸ்வரர் அருளால், குபேரன் இழந்த தனது பெருமைகளையும், பொருளையும் மீண்டும் பெற்றான் என்கிறது இக்கோயில் தலவரலாறு. ஆகவே, இழந்த சொத்து, சுகங்களை மீண்டும் பெற விரும்புவோர் இத்தல ஈசனை வழிபட்டு பலன் பெறலாம்.

இக்கோயில் இறைவனின் பின்புறம் நான்கு வேதங்கள் சாளக்ராம வடிவில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பாகும். ஆலயத்தின் தல விருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது இந்த ஆலயத்தில் காணப்படும் மற்றுமொரு அதிசயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com