தென்னாட்டின் துவாரகா என போற்றப்படும் அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில் மிகவும் பழமையானது. அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கேரளாவில் உள்ள ஏழு பெரிய வைணவ கோவில்களில் ஒன்றாகும்.
ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் அர்ஜுனனின் தேரோட்டியான பார்த்தசாரதி கோலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வலது கையில் சாட்டையுடனும், இடது கையில் சங்கு ஏந்தியும் காட்சி தருகிறார்.
இக்கோவில் கி.பி.பதினேழாம் நூற்றாண்டுகளில் செம்பகச்சேரி சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான பூராடம் திருநாள் தேவ நாராயணன் தம்புரானால் கட்டப்பட்டது.
இக்கோவில் கேரள கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றியுள்ள சுவர்கள் அழகான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் பால்பாயசம் முக்கியமான பிரசாதமாகும். இக்கோவில் பாயசத்தை தினம் குருவாயூரப்பன் வந்து ஏற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அரிசி, ஏலக்காய், பால், சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இந்த பிரசாதம் மதிய நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இக்கோவில் காலை 3 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 1789 ல் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது குருவாயூர் கோவிலின் கிருஷ்ணர் சிலை இங்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் இக்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆற்றங்கரையில் கட்டப்பட்டதால் இந்த இடம் 'அம்பலப்புழா' என அழைக்கப்படுகிறது. அம்பலம் என்றால் கோவில், புழை என்றால் ஆறு.
இக்கோவிலில் 'ஆராட்டு விழா' சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது 'வேலக்களி' எனும் ஆட்டம் நடத்தப்படுகிறது. அது தவிர ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி போன்ற விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டிச் செல்ல அவர்களின் துன்பங்கள் நீங்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.