

கிருஷ்ணர் கையில் சுதர்சன சக்கரம் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். அந்த வகையில் கிருஷ்ணர் என்று சொன்னதும் நம் எல்லோருடைய நினைவிற்கு வருவது அவரது தலையில் மயிலிறகு இணைக்கப்பட்ட கிரீடமும், சுதர்சன சக்கரமும்தான்.
கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது, அதன் ஆற்றல் அளவிட முடியாதது. ஹோமங்களில் சுதர்சன ஹோமமும், மந்திரங்களில் சுதர்சன மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்தாக சொல்லப்படுகிறது.
கிருஷ்ணரின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் என்பது மகாவிஷ்ணுவின் வலிமைமிக்க, சுழலும் தெய்வீக ஆயுதமாகும்.
கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால், சுதர்சன சக்கரம் இயற்கையாகவே அவரிடம் இருந்த தெய்வீக ஆயுதமாகக் கருதப்படுகிறது. சுதர்சன சக்கரம் விஷ்ணுவின் அழிவில்லாத ஆயுதம்.
இந்த சுதர்சன சக்கரம் தீய சக்திகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பயன்படுத்தப் படுகிறது. இது 108 பற்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த வட்ட வடிவ ஆயுதமாகும். மேலும் இது ஒரு தீய சக்தியை அழித்துவிட்டு, மீண்டும் கிருஷ்ணரின் கைக்கே திரும்பி வரும் ஆற்றல் கொண்டது.
இது கிருஷ்ணரின் வலது கையின் சுண்டு விரலில் சூழன்றுகொண்டிருக்கும். இது மகாவிஷ்ணுவின் நான்கு கரங்களில் ஒன்றில் எப்போதும் இருக்கும், மேலும் இது கால சக்கரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இது "சக்கரத்தாழ்வார்" என்றும் வழிபடப்படுகிறது. அதனால் தான் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பில்லி சூனியம், கடன், மற்றும் நோய்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என நம்பப்படுகிறது. 16 திருக்கரங்களைக் கொண்ட சுதர்சனர், ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதத்தை தாங்கி காட்சி அளிக்கிறார். கல்வி சிறக்க, கடன்கள் தீர, தொழிலில் முன்னேற்றம் ஏற்பட சக்கரத்தாழ்வாரை வழிபடுவது வழக்கம்.
சாதாரணமாக ‘சுதர்சன சக்கரம்’ கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும். ஆனால் மகாவிஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்துதான் ஏவுகிறார். சுதர்சன சக்கரத்தை விடுவித்த பிறகு, எதிரி அழிக்கப்பட்டு, அது அதைப் பயன்படுத்தியவரிடமே திரும்பிவிடும். அதாவது அதை விடுவித்த பிறகும், அது அதைப் பயன்படுத்தியவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
அதேபோல் சுதர்சன சக்கரம் வீசப்பட்டால் அது எதிரியை மட்டுமே அழிக்கும். அதை எறிந்தவன் தவிர வேறு யாராலும் தொட முடியாது. அந்த வகையில்… கிருஷ்ணர் சக்கரம் வீசியது எதிரியை அழிக்க மட்டும் அல்ல, அதர்மத்தை நிறுத்தவும், சமநிலையை மீட்டெடுக்கவும்.
தீயசக்திகளை அழித்து, நன்மைகளை நிலைநாட்டும் தெய்வீக கருவியாக சுதர்சன சக்கரம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 'சுதர்சன' என்றால் மங்களகரமான பார்வை என்றும், 'சக்கரம்' என்றால் சுழல்வது என்றும் பொருள்படும், இது எல்லா நேரத்திலும் கிருஷ்ணரின் விரலில் செயல்பாட்டில் சூழன்று கொண்டே இருக்கும்.
சிசுபாலனை வதம் செய்தது, பௌண்டரக வாசுதேவனை வென்றது, மற்றும் அர்ஜுனனின் பாசறைக்கு பாதுகாப்பளித்தது போன்ற பல முக்கிய தருணங்களில் கிருஷ்ணர் சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தினார்.
சுதர்சன சக்கரம் என்பது சத்வ குணத்தின் உச்சமாகவும், அநீதியை அழிக்கும் கருவியாகவும் கருதப்படுகிறது.
மகாபாரதக் கதைகளின்படி, காண்டவ வனத் தகனத்தின் போது அக்னி தேவன் கிருஷ்ணருக்கு இந்தச் சக்கரத்தை வழங்கியதாகவும், பரசுராமர் கிருஷ்ணருக்கு சக்கரத்தை வழங்கியதாகவும் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. இது தர்மத்தைக் காக்கப் பயன்படுத்தப்பட்டது.
பெருமாள் தனது பக்தனை காக்க வேண்டும் என நினைத்தால் அந்த மனதை விட வேகமாக சென்று, பக்தனுக்கு அருளக் கூடியதாக சுதர்சன சக்கரத்தை சொல்லுவார்கள். பக்தனை காப்பதற்கு பெருமாள் செல்வதற்கு முன் சுதர்சன சக்கரம் அங்கு சென்று விடுமாம்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலநாட்டுவதே சுதர்சன சக்கரமாகும். வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் அதாவது நாம் செய்யும் நன்மையும், தீமையும் நமக்கே திரும்ப வரும் அதுதான் சூட்சுமத்தின் ரகசியம்.