திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ராஜகோபுரத்தில் கட்டபொம்மன் காலத்து மணி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரம் ஒன்பதாம் நிலை புதுப்பிக்கப்பட்டு தயாராகி வருகிறது. ராஜகோபுரத்தில் ஒன்பதாவது நிலையில் ராட்சத மணி ஒன்று உள்ளது. இந்த மணி கட்டபொம்மன் காலத்தில் ஒலித்தது.
முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் வைத்திருந்த அளவு கடந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது. அதை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களையும் நிகழச் செய்துள்ளார்.
கட்டபொம்மன் தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை நிவேதனம் முடிந்த பிறகே தனது மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங்குறிச்சி. இங்கிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்து விட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் என்ன செய்தார் தெரியுமா? திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெண்கல மணிகளை பொருத்தினார்.
ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தி, திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்த உடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம். இதைத் தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும். உடனே அந்த மண்டபத்தில் இருக்கும் சேவகன் மண்டபத்தின் மணிக்கட்டை அவிழ்த்து மணியோசையை எழுப்பவான். இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும்.
இந்த மணிகள் வரிசையாக ஒலித்த பின் பாஞ்சாலங்குறிச்சியில் வீரஜக்க தேவியை வணங்கி விட்டு வீரபாண்டி கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த கட்டபொம்மன் காலத்து மணி கடைசியாக 2009ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போது ஒலித்தது. அதைத் தொடர்ந்து சிறிது காலம் மட்டுமே ஒலித்தது. அதன் பிறகு காலப்போக்கில் மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டது. தற்பொழுது மீண்டும் ஒன்பதாவது நிலையில் உள்ள ராட்சத மணி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள். முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால் தன்னுடைய நெற்களஞ்சியத்திலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நெல்லை அனுப்பி கொண்டிருக்கும் பழக்கத்தையும் கட்டபொம்மன் கொண்டிருந்தார். இது தவிர, குடிமக்களும் தங்களது வயல்களிலிருந்து நெல்லை காவடியாக சுமந்து கோயிலுக்கு செலுத்தும் நடைமுறையையும் கொண்டுவர பணித்திருந்தார்.
ஒரு சமயம் தனது மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றாக அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதை தயாரிக்கும்படி சொல்லியிருந்தார் கட்டபொம்மன். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன், ‘அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே’ என்றாராம். அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துக்கொண்டு போய் திருச்செந்தூர் முருகனுக்கு அணிவித்துவிட்டார் கட்டபொம்மன்.
திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது. தேரோட்டத்திற்கு தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். ஏனோ அன்று அவரால் வர முடியவில்லை. சரி, நாமே தேரை இழுத்து விடலாம் என பக்தர்கள் தேரை இழுத்தனர். சிறிது தூரம்தான் தேர் உருண்டது. அதற்கு மேல் நகராமல் நின்றுவிட்டது. தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று விட்டது. எவ்வளவோ முயற்சித்தும் தேர் நகரவில்லை.
இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு இந்தத் தகவல் தெரிய வர, அவரும் இங்கு வந்து சேர்ந்தார். கட்டபொம்மன் தேர் வடத்தைப் பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இது போல பல அற்புதங்களை கட்டபொம்மன் மூலம் முருகன் அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார்.