இராமேஸ்வர தீர்த்த மகிமைகள்!

இராமேஸ்வர தீர்த்த மகிமைகள்!

ஸ்ரீராமர் சீதையை மீட்க, ராவணனிடம் போர் புரிந்து அவனை வதைத்தார். ராவணனை கொன்ற பாவம் நீங்க, மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து ஸ்ரீராமர் தமது பாவத்தைப் போக்கிய திருத்தலம் இராமேஸ்வரம். ஸ்ரீராமன், ஈஸ்வரனை வணங்கியதால் இத்தலத்துக்கு, ‘ராம ஈஸ்வரம்’ என்று பெயர் ஆனது. பக்தர்கள் இத்தலத்தில் உள்ள 22 புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, இறைவனை வழிபட்டு தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். மகிமை மிகுந்த இத்தல 22 புண்ணியத் தீர்த்தங்கள் குறித்துக் காண்போம்.

1. மகாலெட்சுமி தீர்த்தம்: இது கோயிலின் கிழக்கு பிரதான வாசலில் அனுமார் சன்னிதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸ்நானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்ரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம்: இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோயிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் நீராட, ஸ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னிதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சூரிய தேஜசை அடைந்து சொர்க்க லோக பதவி பெறலாம்.

7. நீல தீர்த்தம்: மூன்றாம் பிராகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னிதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்த யாக பலனை அடைந்து சொர்க்கலோக பதவி பெறலாம்.

8. கவாய தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரம் சேது மாதவர் சன்னிதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் கோபம் நீங்கி, மன வலிமை, தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரம் சேது மாதவர் சன்னிதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம்: சேது மாதவர் சன்னிதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் தரித்திரம் நீங்கி, ஐஸ்வர்ய ஸித்தி பெற்று பிரம்மஹத்தி பாப நிவர்த்தி அடையலாம்.

11. சங்கு தீர்த்தம்: இராமநாத சுவாமி கோயில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிராகாரத்தில் இது உள்ளது. இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப்பெறும்.

12. சக்கர தீர்த்தம்: இராமநாத சுவாமி கோயில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிராகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் இது உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்: இது இரண்டாம் பிராகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னிதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதுடன், பில்லி சூன்யமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம்: இது இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகால ஞானம் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம்: இது இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தியாகும்.

16. கங்கா தீர்த்தம், 17. யமுனா தீர்த்தம், 18. காயத்ரி தீர்த்தம்: இம்மூன்று தீர்த்தங்களும் இத்திருக்கோயில் இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவற்றில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவையும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

www.aanmeegam.in

19. சாத்யாம்ருத தீர்த்தம்: இது திருக்கோயில் அம்பாள் சன்னிதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னிதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் தேவதா கோபம் பிராம்மண சாபம் நிவர்த்தியாவதுடன், சூரிய மூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம்: இந்த தீர்த்தம் சுவாமி சன்னிதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னிதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்ய, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் முதல் பிராகாரத்தில் இராமநாத சுவாமி சன்னிதி முன்பு உள்ளது. இதில் நீராடினால் பிறவிக் குருடு, நோய், நரை, மூப்பு நீங்கி வளமடையலாம். கோயிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள் உள்ளன. இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம்: இந்த தீர்த்தம், ஸ்ரீராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ஸ்ரீராமர் தனது அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தியதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்த நீரே இராமநாத சுவாமி மற்றும் அனைத்து மூர்த்த அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்த்தத்தை எடுத்து நீராடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்குக் கட்டணம் உண்டு. பக்தர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராட இரண்டாம் பிராகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னிதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம். கோடி தீர்த்தத்தில் நீராடிய பிறகு இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com