மகாலட்சுமி வாசம் செய்யும் தீபத் திரி!

மகாலட்சுமி வாசம் செய்யும் தீபத் திரி!

தினமும் பூஜையறையில் விளக்கேற்றுபவர்களுக்கு, ‘எரிந்து முடிந்த அந்த தீபத் திரியை என்ன செய்வது’ என்கிற சந்தேகம் நிச்சயம் இருக்கும். தீபத்தை வாரம் ஒருமுறை ஏற்றுபவர்கள் ஒருசிலர் அப்படியே விட்டு விடுவதும் உண்டு. விளக்கு ஏற்றிய திரியை அப்படியே விட்டு விட்டால் அதன் நிறம் பச்சை நிறமாக மாறிவிடும். இதுபோல் திரி பச்சை நிறமாக மாறினால் வீட்டுக்கு அவ்வளவு நல்லதல்ல. வாரம் ஒருமுறை விளக்கேற்றும்போது கட்டாயம் விளக்கினை தேய்த்து விட்டு ஏற்றுவது நல்லது. இல்லை என்றால் மறுவாரம் நீங்கள் பார்க்கும்பொழுது அந்த எண்ணெய் திரியுடன் சேர்ந்து பச்சை நிறமாக மாறி இருக்கும். இது வீட்டில் பணத் தடையை உண்டாக்கும் ஒரு செயலாகும். நிறைய பேருக்கு இது தெரிவதில்லை. அதேபோல விளக்கு ஏற்றிய திரியை எந்தக் காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்னைகள் வரும் என்பார்கள். பிறகு அந்தத் திரியை என்னதான் செய்வது?

திரி கருகும் முன்பு, எண்ணெய் காலியாகும் முன்பு மலர்களால் தீபத்தினை அமர்த்தி விடுவதுதான் நல்லது. வாயால் ஊதி அணைக்கக் கூடாது. அதேபோல், தீபத்தில் ஒற்றைத் திரியாகப் போடக்கூடாது. எப்போதும் இரண்டு திரிகளை இணைத்துத்தான் போட வேண்டும். மீண்டும் மறுநாள் விளக்கேற்றும்பொழுது அதே திரியில் ஏற்றலாம் தவறில்லை. திரி கருகி விட்டால் அல்லது நிறம் மாறி விட்டால் மட்டும் அதை மாற்றினால் போதுமானது. தினமும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த தீபத் திரிகளை குப்பையில் கட்டாயம் வீசக்கூடாது. திரியை குப்பையில் போட்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவாள். இந்தத் தவறையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.

ஜாதகத்தில் நமக்கு நல்ல நேரம் இருந்தாலும், வீட்டில் நல்லது நடக்கவில்லை என்றால், இதுபோன்ற ஒருசில விஷயங்களும் காரணமாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள். தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் திரிகளை சேர்த்து வைக்க வேண்டும். தேவையில்லாத ஏதாவது ஒரு பிளாஸ்டிக் பவுலில் சேர்த்து வைத்து வாருங்கள். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும், அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும் வீட்டில் இருப்பவர் அனைவரையும் கிழக்கு முகமாக அமர வையுங்கள். அந்த திரிகளை தூப காலில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள். பின்னர் அவற்றை வீட்டு வாசலில் வைத்து எரித்து விடுங்கள்.

திரிகள் முழுவதும் எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகள் எல்லாம் இந்த தீயில் வெந்துவிடும். திரிகள் கருகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கிள் ஓட விட்டு விடுங்கள். இதனால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் தீரும். வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் மலரும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். இனி ஒருபோதும் தீபத் திரியை தூக்கி எறிய மாட்டீர்கள்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com