Sri Sathya sai baba
Sri Sathya sai baba

பயனில்லாத அற்புதங்கள் அற்பமே!

ஸ்ரீ சத்யசாயி பாபா ஜயந்தி (23.11.2023)

‘அற்புதங்கள் புரிவது மட்டுமே ஒரு மகானுக்கு தகுதியில்லை; மனித நேயத்துடனும் அவர் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்’ என்று நம்மில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா. அவரது ஜயந்தி திருநாள் இன்று. இந்தியத் திருநாட்டுக்கு அவர் செய்த ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகள் ஏராளம். அவரது ஜயந்தி நாளான இன்று, ‘அற்புதங்கள்’ குறித்து மக்களுக்கு அவர் தெரிவித்த கருத்துக்களை இந்தப் பதிவில் காண்போம்.

“ஒருவருக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால், அதற்கு கடவுள் முலாம் பூச நினைப்பது அறியாமை ஆகும். இந்த பூமியில் இருந்து ஒரு பொருளை ஆகாயத்தில் தூக்கி எறிந்தால், அது திரும்பவும் கீழே வந்து விழுகிறதே, இது அற்புதம் இல்லையா? நாம் வாழும் பூமி, அசுர வேகத்தில் சுழன்றுகொண்டு, அதே வேகத்தில் சூரியனையும் சுற்றிக்கொண்டு அண்டத்தில் விரைந்து செல்லும்போது நாம் தூக்கி வீசப்படாமல் சாதாரணமாக பூமியில் இருக்கிறோமே; இது அதிசயம் இல்லையா? பல்வேறு உயிரினங்கள் விதவிதமான உறுப்புகளுடன் பிறந்து, வாழ்ந்து மடிகின்றனவே; இவை ஆச்சரியம் இல்லையா? கழிவு, குப்பைகளில் இருந்து மரம், செடி வளர்ந்து சுவையான பழங்களைத் தருகின்றனவே; இவை எல்லாம் இயற்கையாக நடக்கும் அற்புதங்கள்தானே!

இதையும் படியுங்கள்:
பாபாவின் முன்பு தோற்றுப்போன கல்வி அறிவு!
Sri Sathya sai baba

ஒருவர் நிகழ்த்தும் ஒரு அற்புதத்தால் உலகில் யாருக்காவது ஒரு துளி நன்மை இல்லையென்றால் அந்த அற்புதம் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நோய் மாறுவது, பூ விழுவது, விபூதி கொட்டுவது, சிலையில் கண்ணீர் வழிவது, முடவர் எழுந்து நடப்பது என்று எல்லாமே ஒவ்வொரு காரணியின் நிமித்தம் நடைபெற்ற விளைவுகளே அன்றி, அற்புதம் என்று ஒன்றும் இல்லை. சிலர் இப்படியான விளைவுகளை ஏமாற்று வித்தை மூலமும் கொண்டுவந்து புகழ் சேர்க்கிறார்கள். இதனால் மனித குலத்துக்கோ அல்லது எந்த உயிரினத்துக்கோ ஒரு துளி நன்மையும் இல்லை. இதுபோன்ற அற்புதங்களை நிகழ்த்துபவர்கள், விபூதிக்குப் பதிலாக ஒரு பத்து டன் ஆட்டா மாவினை தினசரி உருவாக்கினால் இந்தியாவின் உணவுப் பிரச்னை நீங்கி விடுமே.

மனிதனே ஓர் அற்புதம். அவனின் மனம் தேவையின்றி, கடவுள், சொர்க்கம் என்று அலைந்து திரிகின்றது. உண்மையில், இந்த மனத்தின் சக்தியால் அவன் மிருக குணம் உள்ளவனாகவோ, தெய்வீக குணம் கொண்டவனாகவோ மாறக்கூடிய அற்புதத்தை அவனால் நிகழ்த்த இயலும்.”

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com