

உலகில் பல கனிகள் இருந்த போதிலும் இறைவனுக்கு இந்து வழிபாட்டில் தேங்காய் மற்றும் வாழைப்பழமே படைக்கப்படுகிறது. இந்த இரண்டும் தமிழருடைய கலாச்சாரத்திலும், உணவிலும், இறை வழிபாட்டிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்? எந்த ஒரு பழத்தை சாப்பிட்ட பின்பு அதன் விதையை மண்ணில் நட்டினால் அது மீண்டும் தளைத்து மரமாக வளரும் தன்மை கொண்டது.
ஆனால் தேங்காயை உடைத்த பிறகு அதன் வோட்டை மண்ணில் நாட்டினால் அது மரமாக வளராது. அதேபோல்தான் வாழைப்பழத்தின் தோலை மண்ணில் வீசினாலும் அது மரமாக வளராது. இவ்வாறு தேங்காயும் வாழைப்பழமும் ஒருமுறை பயன்படுத்துவதிலேயே அதனுடைய பயன் (வாழ்வு) முடிந்துவிடுகிறது. இவை மேலும் எச்சில் படாத உணவுப் பொருளாக உள்ளது. ஏழையாக இருந்தாலும் செல்வந்தனாக இருந்தாலும் வாழ்வின் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கு தேவைப்படுவது பிறவா நிலையே. மனிதன் எவ்வளவு பெரிய செல்வந்தனாக பிறந்து பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், மாட மாளிகைகளை அனுபவித்தாலும் அவன் ஒருநாள் நிச்சயம் துன்பத்தை எதிர்கொள்ளும் நிலை வரும்.
இதனாலே வாழ்வின் மீது பலருக்கு ஒரு வயதிற்கு மேல் நாட்டம் இருக்காது. இறைவனிடம் அனைவரும் வாழ்வில் இறுதியில் வேண்டுவது “பிறவாத நிலை வேண்டும்” (முக்தி) என்பதே. “தேங்காயும் வாழைப்பழமும் எடுத்துக் கொண்ட பிறவி மீண்டும் பிறக்க முடியாது” என்பதை உணர்த்துகிறது. மனிதர்கள் இறைவனிடம் எங்களை மீண்டும் படைக்காமல் முக்தியை தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இவ்விருப் பொருட்களும் படைக்கிறோம்.
தேங்காய் ஓடு என்பது மனிதனின் ஆணவம், அகங்காரம் மற்றும் நிரந்தரம் இல்லாத இந்த வாழ்க்கையின் பேராசையை குறிக்கிறது. அதனை உடைத்து உள்ளே இருக்கும் வெண்மை நிற தேங்காய் ஆனது இறைவனுக்கு மனிதனின் தூயபக்தியை அர்ப்பணிப்பதாகும்.
மேலும் தேங்காயின் முக்கண்கள் முக்காலத்தை உணர்த்துவதாக உள்ளன. இது ஈசனின் மூன்று கண்களாக கருதப்படுகிறது. வாழைப்பழம் பிறவியற்ற நிலையை குறிக்கிறது. வாழை மரத்தை விதை மூலம் நம்மால் நடமுடியாது. அது வாழை கன்று மூலம் மட்டுமே மரமாக வளரும். தேங்காயும் வாழைப்பழமும் மனிதனின் எச்சில் படாமல் பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருளாக உள்ளது.
தேங்காயை உடைத்தும் வாழைப்பழத்தை உரித்து இறைவனுக்கு படைக்கும்போது அது மனிதனால் எச்சில்படாத புனிதமான படைப்பாக கருதப்படுகிறது. தேங்காய் மற்றும் வாழைப்பழத்தின் மகத்துவத்தை அறிந்தே அனைத்து நல் காரியங்களுக்கும், நல்ல தொடக்கங்களுக்கும், வீட்டு விசேஷங்கள், கோவில் பூஜைகளுக்கும் தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை நாம் வைத்து வழிபடுகிறோம்.