நாம் சிறுவர், சிறுமிகளாக இருந்தபொழுது மார்கழி 1 பிறந்து விட்டால், அன்றிலிருந்து பொங்கல் வரும் நாளை கணக்குப் பார்த்துக் கொண்டே வருவோம். ‘பொங்கல் வரட்டும் , நான் ஒரு பானை பொங்கலை அப்படியே சாப்பிட்டு விடுவேன்’ என்றெல்லாம் விளையாட்டாக கூறுவோம். ஏனென்றால், பொங்கல் அப்படி ஒரு அற்புதமான உணவு. அப்போதெல்லாம் இனிப்பு பொங்கலை விசேஷ தினங்களில் மட்டும்தான் செய்துத் தருவார்கள். ஆதலால் அப்படி ஒரு ஆசை வரும். பிறகு போகியன்று இரவிலிருந்தே, ‘அப்பாடா வந்து விட்டது பொங்கல்’ என்று பொங்கல் சாப்பிட அவ்வளவு ஆர்வம் கொள்வோம்.
இன்றும் கிராமங்களில் அம்மையில் குளிர்ந்து போனவர்களுக்கு அவர்கள் குளிர்ந்த தினத்தன்று பொங்கல் வைத்து அவர்களுக்குப் படையல் இட்டு, மாவிளக்கு, காப்பரிசி செய்து கிராமத்தில் உள்ள அனைவரையும் அழைத்து அதை பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அதை அனைவரும் மன மகிழ்ச்சியுடன் பிரசாதமாக உண்டு மகிழ்வர். மாசி மாதங்களில் தஞ்சையை ஒட்டிய கிராமப்புறங்களில் இது இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கம். இதை, ‘மாரியம்மன் பொங்கல்’ என்று கூறுவர். மற்றைய எல்லா ஊர், மாநிலங்களிலும் ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து அம்மன் வழிபாடு நடத்துவது நம் பழக்க வழக்க பண்பாடுகளில் பின்பற்றப்படும் மரபு.
நம் கோயில்களில் வருடம்தோறும் கொண்டாட்டத்துடன் நடத்தும் ஒரு சடங்கு பொங்கல். கோயிலில் மட்டுமல்ல, விசேஷ நாட்களில் வீட்டு முற்றத்திலும் பொங்கல் படைக்கின்றனர். பக்தி வெளிப்படுதலால் தேவி நாமங்களைச் சொல்லிக்கொண்டே பக்தர்கள் தேவதைகளுக்கு பொங்கல் படைக்கின்றனர். ஜகத் மாதாவான பராசக்தியை பூஜிக்கும்போது மாதாவுக்கு முன் அந்த சத்சொருபத்தை இதன் வாயிலாக சமர்ப்பிக்கின்றனர். இருளை அகற்றி ஒளிக்காக வேண்டுவதே சடங்கின் முக்கிய விசுவாசம். மேலும், தங்கள் வெற்றி, தோல்விகளையும், ஆசைகளையும் விவரித்து ஆறுதல் அடைவது இதனால் பெறும் பயன்.
"பெண்கள் பய பக்தியுடனும் விசுவாசத்துடனும் பொங்கல் படைக்கும்போது பானைகளில் கொதித்து பொங்கி வழிவது அகம் என்று நம்பிக்கை. அகமழிந்து கடைசியில் அது நைவேத்தியமாக மாறுகின்றது.
கடும் வெப்பம், மூச்சு திணற வைக்கும் புகை, ஓசை நிறைந்த சூழ்நிலை முதலியவை பெண்களில் அன்றாட வாழ்க்கையின் சோதனைகளையும் இக்கட்டான நிலைகளையும் சமாளிக்கும் திறனை அளிக்கின்றன. மண் பானையில் பொங்கல் இடுவதின் நன்மை சிறப்பானது. சமைக்கும் உணவில் உள்ள அசுத்தங்களை மண் பானை உறிஞ்சி எடுக்கும் என்பது அறிவியல் சுட்டிக்காட்டும் உண்மை.
இப்படி எல்லா காலங்களிலும் விசேஷ தினங்களில் பொங்கல் படைப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டால் அதிலும் பல தத்துவங்கள் அடங்கியிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, தேவீக்கு படைப்பதில் அனைவரும் அக மகிழ்வது இதனால்தான்!