
நாம் மன அமைதிக்காக பூங்கா செல்கிறோம். சிலர் ஆலயங்கள் செல்வார்கள். அவரவர் விருப்பப்படி சென்று தங்கள் மன நிம்மதியைத் தேடிக் கொள்வார்கள்.
அந்த வகையில் ஆலயம் சென்று இறைவனைத் தொழுது பின் பிரகாரம் சுற்றி வரும் பொழுது, அந்த ஆலயத்தில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்த பிரசாதம் வழங்கப்படும். அவற்றை வாங்கும் போது வலது கையால் வாங்க வேண்டும் என்பார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா?
நமது உடலில் வலது கை என்பது தூய்மையான ஒன்றாக கருதப்படுகிறது. எந்த செயல் செய்தாலும் வலது கைதான் பழக்க படுத்தப்படுகிறது. மேலும் ஆலயத்தின் நேர்மறை ஆற்றல்கள் வலது கையின் விரல்களின் வழியே நமது உடலுக்குள் செல்வதாக நம்பப்படுகிறது.
காலங்காலமாக வலது கை பழக்கத்தில் உள்ளது. ஆலயங்களில் பிரசாதம் பெறும் பொழுது வலது கை பயன்படுத்தி வாங்குவதுதான் நாம் அந்த ஆலய கடவுளுக்கு செய்யும் மரியாதையாகும். மேலும் அந்த பிரசாதத்தை தருபவருக்கு ஒரு மரியாதை செலுத்துவதாக ஆகிறது. இடது கையால் வாங்குவதை எவரும் விரும்புவதில்லை.
வலது கை ஒரு தெய்வீக தன்மை நிரம்பி உள்ளது முன்னோர்கள் கருதியதால் அந்த பழக்கத்தையே நம்மிடமும் ஏற்படுத்தி உள்ளனர். நாம் பிறரை ஆசிர்வதிக்கும் பொழுதும் வலது கையால் ஆசிர்வதிக்கிறோம்.
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் சென்று ஆலயத்தைப் பார்த்து விட்டு திரும்பும் பொழுது, ஒரு சீக்கிய அன்பர் ஒருவர் பிரசாதம் வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்தார்.
நான் வலது கையை மட்டும் நீட்டி பிரசாதம் கேட்டேன். அதற்கு அந்த சீக்கிய அன்பர்… "இரு கைகளை ஏந்தி வாங்கி கொள்ள வேண்டும்” என்று விளக்கினார். நான் எதற்கு என்று கேட்ட பொழுது… அவர்களின் சீக்கிய வழக்கப்படி இரு கைகளால் பெறுவது தான் இறைவனுக்கு செய்யும் பக்தி என்று விளக்கினார். அவரின் இறை நம்பிக்கையை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டேன்.
அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
”எனவே ஆலயம் செல்பவர்கள் கோயில் பிரசாதங்கள் பெறும் பொழுது வலது கரங்களைப் பயன்படுத்துவது இறைவனுக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது.
இன்முகத்துடன் வலது கையால் பிரசாதம் பெற்று இறைவனின் அருளைப் பெறுங்கள்.