

விருப்பமான உடைகள் அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனாலும் விசேஷங்களுக்கும், கோவில்களுக்கும் பட்டாடை அணிந்து செல்வதை நம் முன்னோர்கள் முதல் இன்றைய தலைமுறையினர் வரை பின்பற்றி வருகின்றனர். புடவைகளில் பல வகைகள் இருந்தாலும் பட்டுப்புடவைக்காண மவுசு மட்டும் இன்று வரை குறையவில்லை. அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் போது பட்டாடை அணிந்து செல்வதன் காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பட்டு ஆடைகள்
வீட்டு விசேஷம் தொடங்கி கல்யாணம், காது குத்து வரை அனைத்து விசேஷங்களுக்கும் பெண்கள் பட்டு ஆடைகள் அணிந்து செல்வதை பெருமையாகவும் மங்கள கரமானதாகவும் புனிதமாகவும் கருதுகின்றனர்.
நம் முன்னோர்கள் எந்த ஒரு விஷயத்தையும் காரணம் இல்லாமல் கூறமாட்டார்கள். நம் உடலில் பட்டு ஆடைகள் உடுத்துவதால் ஏற்படும் காந்த சக்தியானது அதிகம் வெளியேறாமல் நம்மை பாதுகாக்கும் கவசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பட்டு சேலையின்பளபளப்பு தன்மை காரணமாகவும் அதனுடைய மென்மை தன்மை காரணமாகவும் பெண்களின் அழகை மேம்படுத்தி காட்டுவதால் உலகம் முழுவதிலும் இருக்கும் பெண்களின் விருப்பமான ஆடையாக உள்ளது. மேலும் பட்டுப்புடவை அணிவதால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதோடு உடலுக்கு எத்தகைய தோல் அலர்ஜியையும் ஏற்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்கு பட்டு சேலை அணிவதன் அவசியம்
வேள்விகள், அர்ச்சனைகள், மந்திர உச்சரிப்பின் போது கோவில்களில் நேர்மறை ஆற்றல்கள் (positive vibration) உருவாகின்றன. இவ்வாறு உருவாக்கும் நேர்மறையான இறை சக்தியை பட்டு சேலை ஈர்த்து உள்வாங்க உதவிகரமாக இருக்கிறது. எந்த ஒரு தோஷமும் பட்டாடை அணிந்து செல்வதால் உண்டாவதில்லை என்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது பட்டு சேலையை அவசியமாக அணிந்து செல்லவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
நேர்மறை சக்தி
பட்டுப்புடவையின் மகிமையின் காரணமாகவே கோவிலில் இருக்கும் அம்மனுக்கு பட்டுப்புடவை உடுத்துகின்றனர். அவ்வாறு அம்மனுக்கு உடுத்திய புடவைகளில் நேர்மறை சக்திகள் அதிகம் இருக்கும் என்பதால்தான் அம்மனின் புடவை ஏலத்திற்கு வரும்போது பெண்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுக்கிறார்கள்.
கோவிலுக்கு பட்டாடைகளை அணிந்து செல்லும் போது அவை நேர்மறை ஆற்றல்களை உட் கிரகித்து உடலுக்கு கடத்தும் வேலையை திறம்பட செய்கிறது. மேலும் பட்டாடை அணிபவர்களின் உடலையும் மனதையும் உற்சாகமாக வைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. அசல் பட்டுக்கு மட்டுமே பொருத்தமான இந்த விதி தங்க நகைகளுக்கும் சரியாகப் பொருந்தும். தங்க நகைகளை அணிந்து செல்பவர்களுக்கும் நேர்மறை ஆற்றல் கிடைப்பதோடு மனதிற்கும் உடலுக்கும் உற்சாக டானிக் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.
புதுமண தம்பதிகளும், பட்டாடைகளும்
புதுமண தம்பதிகளுக்கு காந்த ஈர்ப்பு அதிகம் ஏற்படும் என்பதால் தான் குடும்ப வாழ்வில் நுழையும் திருமணத்தன்று புது மண தம்பதிகளுக்கு பட்டாடை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். மாங்கல்யம்,தங்க நகைகள் போன்றவற்றை கோவிலின் கருவறையில் வைத்து எடுப்பதன் மூலம் நேர்மறை சக்தியை அதிகம் ஈர்க்க முடியும். அதனால்தான் தங்க நகைகளை கோவிலுக்கு செல்லும்போது பெண்கள் அணிந்து செல்வது நல்லது என கூறப்பட்டுள்ளது.
இயற்கை இழைகளால் ஆனதால் பட்டும் பருத்தியும் தூய்மையானதாக ஆன்மீக நூல்களின்படி கூறப்பட்டுள்ளன. சாத்வீக அதிர்வலைகளையும் தெய்வீக ஆற்றலையும் பட்டாடைகள் ஈர்ப்பதால் கோவிலுக்கு பட்டாடை அணிந்து செல்வதே சிறந்தது என நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
அறிவியல் காரணம்
சிறிய அளவிலான நிலையியல் மின்சாரத்தை உடலுக்கும் பட்டுக்கும் இடையே ஏற்படும் உராய்வு உருவாக்கும். இது சுற்றி இருக்கும் மின்காந்த அதிர்வலைகளை ஈர்த்து உடலில் நிலை நிறுத்தும் என்ற அறிவியல் கூற்றின் அடிப்படையிலும் கோவிலுக்கு பட்டு சேலையே உகந்ததாக கருதப்படுகிறது.
ஆகவே கோவிலுக்கு செல்வதானாலும் விசேஷங்களுக்கு செல்வதானாலும் பட்டாடைகளை உடுத்தி நேர்மறை ஆற்றலை ஈர்த்து பலன் பெறுவோம்.