சிரசாசனத்தில் சிவன் - எங்கே தெரியுமா?
சிவபெருமான் பக்தர்களுக்கு தலைகீழாக சிரசாசனத்தில் காட்சி அளிக்கும் திருக்கோலம் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யமமருது பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.
முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அசுரன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் பல வரம் பெற்றான். அந்த கர்வத்தால் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக் பாலகர்களில் யமனைத் தவிர அனைவரையும் தோற்கடித்தான். எமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போரில் யமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார்.
இறுதியாக சம்பாசுரன் யமபுரியைக் கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் யமன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது இறைவன் தற்போது உள்ள கோவிலில் ஆழ்ந்த தியானத்தில் சிரசாசனத்தில் இருந்தார்.
ஈசனின் தியானம் கலைய, வழி அறியாது யமன் வேதனை அடைய, பார்வதி காட்சி தந்து அவனுக்கு அசுரனை அழிக்கும் சக்தியை வழங்கினார். யமனும் சம்பாசுரனைக் கொன்று தேவர்களின் குறை தீர்த்தார். பின் இந்த ஸ்தலம் வந்து சிரசாசனத்தில் இருந்த சிவனையும் குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார்.
இங்கே கருவறையில் இறைவன் லிங்க உருவமின்றி சிவஉருவாகக் காட்சி தர அருகிலே பார்வதி அன்னை முருகனை மடியில் கிடத்தி தாய்மையே வடிவாக காட்சி தருகிறார். இது யமன் பூஜித்த தலம் ஆகையால் ம்ருத்யு தோஷம் உள்ளவர்கள் இவரை தரிசிக்க யமபயம் நீங்கும் என்று கூறப்படுகிறது. நவக்கிரகங்களால் ஏற்படும் பிரச்சனை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளையும் நீக்கி சக்தீஸ்வரரும் அம்பிகையும் அருள்பாலிக்கிறார்கள்.