

இந்த வருடம் சம்மர் டூரில் நிச்சயம் மதுரையை மிஸ் பண்ணிடாதீங்க. ஆமாம். 6000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான புராதன நகரங்களில் ஒன்றான மதுரையின் சிறப்பு மிக்க இடங்களைப் பார்த்து நம் பிள்ளைகளுக்கும் வரலாறுகளைத் தெரிந்துகொள்ள உதவுவோம்.
மதுரை பயணத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுடன் திருமலை நாயக்கர் மஹால், அழகர்கோயில், காந்தி நினைவு அருங்காட்சியகம், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில், வைகை அணை, நீர்ப் பூங்காக்கள், மேகமலை போன்ற ஏராளமான இடங்களைக் கண்டு மகிழலாம்.
மதுரை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அழகான மீனாட்சி அம்மன் கோயில்தான். இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தக் கோயில் புனிதத்தலமாக மட்டுமின்றி கட்டடக்கலைக்காகவும் புகழ்பெற்றது.
65 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ஆகம விதிகளை கடுமையாகக் கடைப்பிடித்து கட்டப்பட்டுள்ள இந்த மீனாட்சி அம்மன் கோயில், பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்திய கட்டடக்கலையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கோயிலில் உள்ள வண்ணமயமான மற்றும் நுணுக்கமான சித்திரவேலைப்பாடுகளைப் பார்த்து ஆச்சரியப்படுவதுடன் ரசித்தும் வரலாம்.
மேலும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அக்கால கட்டடக்கலையின் மொத்த அழகையும் விளக்கும் 985 தூண்களின் அழகு கண்டு வியக்காமல் இருக்கமுடியாது. ஒரு கோணத்தில் நின்று பார்த்தால் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல தோன்றும். இன்னிசை ஒலிக்கும் 22 தூண்கள் நிச்சயம் மகிழ வைக்கும். பல சிறப்புகள் மிக்க மீனாட்சி அம்மன் கோயில் உலக அதிசயங்களுக்கான புதிய 30 இடங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டதை அறிவோம். தமிழ்நாட்டின் கோயில் நகரம் என மதுரை அறியப்பட முக்கியக் காரணமான கோயிலுக்கு அவசியம் செல்லலாம்.
மதுரையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள நீண்ட அணை, குழந்தைகளுடன் குதுகலிக்க ஏற்ற பிக்னிக் ஸ்பாட்டாகும். அமைதியான இயற்கை சூழலை ரசிக்க ஏற்ற இடம்.
மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதுதான் 108 திவ்ய தேச கோயில்களில் புகழ்பெற்ற கோயிலான அழகர் கோயில் சிற்பங்கள் மற்றும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மண்டபங்கள் வடிவில் உள்ள கண் கவர் கலைச் சிற்பங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தும் இந்தக் கோயிலுக்குச் சென்று வரலாம். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கியமான ஆன்மிக வரலாற்றுடன் உள்ள இது நிச்சயம் காணவேண்டிய கலைக் கோயில்.
மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சில நிமிட தூரத்துக்குள் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையின் அடையாளங்களில் ஒன்றான இது 17 ஆம் நூற்றாண்டுகள் பழைமையானது. இந்த அரண்மனை இத்தாலிய பாணியின் அற்புதமான கலவையுடன் அமைந்துள்ளது. பழைமையின் பெருமையை இந்த அரண்மனையைச் சுற்றிப் பார்ப்பதன் மூலம் உணரலாம். இங்கு செல்ல நீங்கள் தனியார் பேருந்தையும் பயன்படுத்தலாம்.
மதுரைக்கு அருகில் உள்ள வினோதமான ஒரு மலை வாசஸ்தலம்தான் மேகமலை. மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் சுமார் 158 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இந்த மலை மதுரைக்கு செல்லும் சுற்றுலா இயற்கை ஆர்வலர்களையும் சொர்க்கமாகிறது. இங்குள்ள இடங்களின் மலைகளின் அழகை தங்கி இருந்து ரசிக்க விரும்பினால் ரிசார்ட்கள் உதவுகிறது. 1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் மலைகளின் அமைதி மற்றும் இயற்கை சூழ்ந்த இடங்களுடன் அங்குள்ள தேயிலை தோட்டங்களின் கண் கவர் அழகு போன்றவை நிச்சயம் நம்மை மயக்கும். மேகமலைக்கு செல்ல மதுரை ஜங்ஷனிலிருந்து ரயிலில் சென்று அருகில் உள்ள தேனி நிலையத்தை அடைய வேண்டும். அங்கிருந்து பேருந்து அல்லது காரில் சின்னமனூர் வழியாக மேகமலை செல்லலாம்.
குழந்தைகளுடன் அவசியம் காண வேண்டிய இடங்களில் ஒன்றாகிறது காந்தி நினைவு அருங்காட்சியகம். இது நமக்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தியின் நினைவிடம் ஆகும். இங்கு அவரது வாழ்க்கையைப் பற்றிய விரிவான விபரத்தை நாம் அறியலாம் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம்.
மேலும், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். மதுரை நகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சமணர் மலையில் சமணர்கள் வடித்த நினைவுச் சின்னங்களை ஆராயலாம்.
மதுரை மாநகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பரங்குன்றத்தை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க. இது புகழ்பெற்ற முருகனின் ஆறு தலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் பாறையில் வெட்டப்பட்டு இந்திய கைவினைக் கலைஞர்களின் அசாத்திய திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
மலைக்கு அருகில் அமைந்துள்ள கோயிலின் அழகிய தூண்களும், கூரையும், அழகிய தெய்வ ரூபங்களும் காண கண் கோடி வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகள் எளிதாக கோயிலுக்குச் செல்லலாம்.
இத்துடன் அதிசயம் எனும் நீர் பூங்கா, மதுரை ஷாப்பிங்.
மறக்காம சுவையான மதுரை உணவுகளை உண்டு பயணத்தை இனிமையாக்கலாம்.
மதுரைக்கு விமானம், ரயில் மூலமும் சாலை வழியாக பேருந்து, கார் போன்ற வாகனங்கள் மூலமும் வருவதற்கு தகுந்த வசதிகள் உள்ளன.
-சேலம் சுபா
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here