

உலகின் பணக்கார நாடான அமெரிக்கா, இந்த ஆண்டு (2026) தனது 250 வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருகிறது. ஜூலை 4,1776 ல் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலையைப் பெற்றது. பரந்து, விரிந்த இந்த நாடு 50 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்த புளோரிடா மாகாணம் இருந்தாலும், நாற்பத்தொன்பதோட ஒன்று என்று எளிதாக விலக்க முடியாத, சிறப்பு மிக்க மாகாணமாக இது திகழ்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.
-உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக நமது மெரினா பீச்சைக் கூறுபவர்கள், முதலிடம் வகிப்பது மியாமி பீச் என்று சொல்லி வைத்தார்கள். அந்த மியாமி பீச் இந்த மாநிலத்தில்தான் உள்ளது.
-இங்குள்ள சீதோஷ்ண நிலை, நமது சென்னை பருவநிலையை ஒட்டியதாக உள்ளது.
-ஆண்டின் எந்த மாதத்திலும் பனிப் பொழிவு கிடையாது. எனவே அதிகக் குளிரும் கிடையாது.
-வட மாநிலங்களில் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிப்போர், ரிடையர் ஆகியதும் விரும்பி வந்து குடியேறுவது புளோரிடா மாநிலத்தில்தான். அதிகக் குளிரில் அல்லற்படுவதைத் தவிர்ப்பதற்காக!
-கடற் காற்றையும், நீர் விளையாட்டுக்களை (Water Sports)யும் விரும்புவோர்க்கு இந்த மாகாணமே சரியான தேர்வு.