புத்தர் கோவில் ஒரு திபெத்திய ஆலயமாகும். இது மைண்ட் ரோலிங் மடாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது
டேராடூனிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு செல்ல நிறைய ஆட்டோக்களும், உள்ளூர் பேருந்துகளும் உள்ளன.
இது 1965 ஆம் ஆண்டு கோச்சென் ரின்போச்சே என்பவரால் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள கிளெமென்ட் டவுனில் ஜப்பானிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.
இமயமலையின் மலையடிவாரத்தின் நடுவில் அமைந்துள்ள மைண்ட்ரோலிங் மடாலயம் புத்த மடாலயங்களில் மிகப்பெரிய மடாலயங்களில் ஒன்றாகும். இங்கு நாடு முழுவதிலிருந்தும் மற்றும் வெளிநாடு களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த மடாலயம் ஆசியாவிலேயே மிக உயரமான ஸ்தூபி, அழகான தோட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தையும் கொண்டுள்ளது.
இங்குள்ள சுவரோவியங்களும்,130 அடி உயர புத்தர் சிலையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. திபெத்திய நியிங்மா பள்ளியின் ஆறு பெரிய மடங்களில் ஒன்றான இந்த புத்த மடாலயம் முதன் முதலில் 1676 இல் ரிக்ஜின் டெண்டாக் லிங்பாவால் நிறுவப்பட்டது. 1965 ஆம் ஆண்டில் சக துறவிகளின் உதவியுடன் கோச்சென் ரின்போச்சேவால் மீண்டும் நிறுவப்பட்டது.
இங்குள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் நகாயூர் நிங்மா கல்லூரியும் உள்ளது. தற்போது 300க்கும் மேற்பட்ட துறவிகள் இந்த மடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். திபத்திய மடாலயம் அதன் அழகான கட்டிடக்கலைக்கு பெயர் போனது. இந்த மடாலயத்தில் உள்ள சுவர் ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கையை அழகாக சித்தரிக்கின்றது.
ஜப்பானிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள மடாலயத்தில் உள்ள இந்த ஸ்தூபி 2002ல் திறக்கப் பட்டதாகும். 220 அடி உயரமும் 100 சதுர அடி அகலமும் கொண்ட இந்த ஸ்தூபி ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்தூபியாகும்.
130 அடி உயர புத்தரின் சிலையும், அழகான மடத்தை சுற்றிலும் பசுமையான அழகிய தோட்டங்களும், புத்தர் மற்றும் குரு பத்மசாம்பவா ஆகியோரின் சிலைகளுடன் ஐந்து மாடிகளை கொண்டுள்ளது.
முதல் மூன்று தளங்களில் தங்க வண்ண சுவர் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. நான்காவது மாடியில் டேராடூன் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய 360 டிகிரி காட்சியை வழங்கும் திறந்த தளம் உள்ளது. இது ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. மைண்ட்ரோலிங் மடாலயத்தை பார்வையிட சிறந்த நேரம் ஏப்ரல் முதல் ஜூன் வரையாகும். வாய்ப்பு கிடைத்தால் இந்த அழகான புத்த மடாலயத்தை பார்த்து வாருங்கள்.