கோயம்புத்தூரிலிருந்து 150 கிமீ, சத்தியமங்கலத்தில் இருந்து 62 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தோடன்லிங் திபெத்திய குடியேற்றம் ஓடையார்பல்யா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த மினி திபெத்திற்கு நீங்கள் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் அல்லது கார் மூலமாகவும் 'லாங் ரைடு' செய்தபடி வருவது சிறப்பு. ஏனென்றால் வழி முழுக்க பசுமையான சமவெளி களையும், அழகான காட்சிகளையும் கண்டு ரசித்தப்படியே பிரயாணிக்கலாம்.
பவுத்த மத கோவில்கள் பெரும்பாலும் பீகார், உத்தரக்கண்ட், ஹிமாச்சல், ஜார்கண்ட் போன்ற இமயமலை ஒட்டிய இடங்களில் பார்க்கலாம். அதைத் தவிர்த்து பார்த்தால் நேபாளம் - திபெத்தில் தான் புத்த கோவில்கள் இருக்கும். ஆனால் தமிழக கர்நாடக எல்லையில்தான் இந்த மினி திபெத்திருக்கிறது.
ஓடையார்பல்யா (Odeyarpalya) என்ற இடத்தில் அமைந்துள்ள இங்கு எங்கு திரும்பினாலும் புத்த மடாலயங்கள், புத்த துறவிகள், திபெத்திய வணிகர்கள், திபெத்திய கடைகள் என அழகாக அமைந்துள்ளது.
கிபி 1959 இல் திபெத்தை சீனா கட்டாயமாக ஆக்கிர மித்ததால், அவர்களின் குரு தலாய் லாமா உட்பட சுமார் 80,000 திபெத்தியர்கள் அகதிகளாக வெளியேறி இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானில் என மொத்தம் 58 இடங்களில் குடியேறினர். இந்தியாவில் இந்த அகதிகள் விவசாயம், கைவினைப் பொருட்கள் செய்யும் தொழில் என்று அவர்களின் திறமையைப் பொறுத்து 39 இடங்களில் குடியேறினர்.
அந்த வகையில் தென்னிந்தியாவில் உள்ள 5 குடியேற்றங்களில் ஒன்றுதான், கர்நாடகாவில் கொள்ளேகலுக்கு (Kollegal) அருகில் உள்ள ஓடையார்பல்யாவில் உள்ள தோடன்லிங் (dhodenling) திபெத்திய குடியிருப்பு. இந்த மக்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் முதல் அடிப்படை வசதி வரை அனைத்தையும் நம் நாட்டு அரசு செய்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஓடையார்பல்யாவில் உள்ள 22 கிராமங்களிலுமே திபெத்திய மக்கள் வாழ்கின்றனர். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்த ஊருக்கு பெயர்கள் இல்லை. எல்லாம் வெறும் எழுத்துக்களால் குறிப்பிடப்படுகிறது.
இந்த தோடன்லிங் திபெத்திய குடியிருப்பு சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 3345 அடி உயரத்தில் உள்ளது, சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் மற்றும் 140 முதல் 170 செமீ மழை பெய்யும். நெல், ராகி, சோளம் போன்ற பயிர்களை பயிரிடுவதற்காக நிலம் வளமான நிலமாக உருவாக்கப்பட்டது. சிலர் ஸ்வெட்டர்களை நெசவு செய்கிறார்கள். அவற்றையெல்லாம் நீங்கள் இங்கே பார்த்து வாங்கலாம்.
இந்த இடத்தில என்னென்ன பார்க்கலாம் என்று கேட்டால் ஜோக்சென் மடாலயம், தக்ஷாம் மடாலயம், தனக் மடாலயம், த்ராக்யால் மடாலயம் மற்றும் பாயோ மடாலயம் என மொத்தம் 7 மடாலயங்கள் உள்ளன. இங்கு புத்த மதத்தை பற்றியும் அதன் சடங்குகள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். கூடவே பிரார்த்தனை யிலும் ஈடுபடலாம் குறிப்பாக அங்கே உள்ள உணவகங்களில் தீபெத்திய உணவுகள் கிடைப்பதால் அவற்றை ருசிக்க தவறாதீர்கள்.
எப்படி போவது என்று யோசித்தால், கோயம்பத்தூரில் இருந்து வண்டியைக் கிளப்பி, கோயம்புத்தூர்-சத்தியமங்கலம்-திம்பம்-ஹாசனூர் வழியாக சென்றால் ஹாசனூர் செல்வதற்கு முன்னே வரும் வலதுபக்கம் திரும்பவும், அதுதான் கொள்ளேகால் செல்வதற்கு பிரதான வழி. கோவையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் செல்ல ஏற்றது. இந்த இடத்திற்கு அதிகாலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பவது போன்ற ஒரு நாள் ட்ரிப் நீங்கள் பிளான் பண்ணலாம். குறிப்பாக சூரியன் மறைந்த பிறகு இந்த வழியில் பயணம் செய்ய வேண்டாம். காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.