

மூன்றாம் நாள் 6.8.26.
நல்ல தூக்கம் தூங்கி காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி 7.30 மணிக்கு பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் பஸ்ஸில் ஏறி விட்டோம். இரண்டரை மணி நேரப் பயணம் செய்து திருகோணமலை பார்க்கக் கிளம்பினோம். வழி எல்லாம் பாட்டுக்கு பாட்டு, அந்தாக்ஷரி, கடி ஜோக்ஸ் என்று டைம் போனதே தெரியவில்லை. வழியில் டீக்காக சிறிது நிறுத்தினார்கள்.
டீ இந்த இடத்தில் மட்டும் சற்று விலை குறைந்து 200 ஸ்ரீலங்கன் ரூபாயில் இருந்தது. அதைக் குடித்துவிட்டு நல்ல வெயில் அடித்ததால் மிக்ஸட் ஜூஸ் ஒரு பாட்டில் வாங்கினோம். விலையை கேட்காதீர்கள். தலை சுற்றியது.
மயிலாப்பூர் போன்ற பழமையான ஊர்களில்தான் மாட வீதி என்று பெயர் பலகையைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாண பகுதியிலோ விநாயகர் வீதி, குருபரன் வீதி, வைத்தியசாலை வீதி என்று மிக அழகாகத் தமிழில் தெருப் பெயர்கள் உள்ளன. பள்ளிகள் கூட வித்தியாரம்பப் பள்ளி என மிக அழகாக தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.