இந்தியாவில் உள்ள ஒரே ‘மிதக்கும் ஏரி’ எங்குள்ளது தெரியுமா?
இந்தியாவில் உள்ள எத்தனையோ ஏரிகளை பார்த்திருப்போம். நன்னீர் ஏரி, உப்புநீர் ஏரி, எரிக்கல் விழுந்து உருவான ஏரி என்று பலவிதமான ஏரிகளை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இந்தியாவில் உள்ள மிதக்கும் ஏரி பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.
இந்தியாவில் வடக்கிழக்கு பகுதியில் உள்ள நன்னீர் ஏரி தான் லோக்டாக் ஏரியாகும். இந்த ஏரி தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஏரியாகும். இது இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மொய்ராங் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. லோக்டாக் என்பதற்கான அர்த்தம் ‘லோக்’ என்றால் ஓடை, ‘டாக்’ என்றால் முடிவு என்பது பொருள்.
இந்த ஏரி மிதப்பதற்கான காரணம் இதில் Phumdi என்று சொல்லப்படும் தாவரம், மண், கரிமப்பொருள்கள் ஆகியவை சேர்ந்து மிதப்பதாலேயே ஆகும். அதுமட்டுமில்லாமல் இங்கிருக்கும் 'கைபுல் லம்ஜா தேசிய பூங்கா' தான் உலகிலே இருக்கும் ஒரே மிதக்கும் பூங்காவாகும். இங்கே 'சங்கை' என்னும் அரிய மான் வகை பாதுகாக்கப்படுகிறது. இங்கு வாழும் தாவரங்கள், பல்லுயிர்களின் மதிப்பை உணர்ந்து இந்த ஏரி 1990 லிருந்து ராம்சாரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 லோக்டாக் தினமாக கொண்டாடப்படுகிறது.
லோக்டாக் ஏரியின் மொத்த பரப்பளவு 250 முதல் 500 சதுர கிலோ மீட்டராகும். இந்த ஏரி 4.6 மீட்டர் ஆழம் கொண்டது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இந்த ஏரியை பார்வையிடுவதற்கு சிறந்த காலமாகும். இங்கே செல்வதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 100, குழந்தைகளுக்கு ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது. மணிப்பூரின் பொருளாதாரத்திற்கு இந்த ஏரி பெரிதும் உதவுகிறது. வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கு, குடிநீருக்கு போன்ற பல இடங்களில் இந்த ஏரியால் பெரும் உதவிக்கிட்டுகிறது.
இங்கிருக்கும் மீனவர்களுக்கும் இந்த ஏரியே வாழ்வாதாரமாக இருக்கிறது. இங்கிருக்கும் 4000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த மிதக்கும் ஏரியிலேயே வீடு கட்டி வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியில் 230 வகையான நீர்வாழ் உயிரினங்களும், 100 வகையான பறவைகளும், 400 வகையான விலங்கு வகைகளும் வாழ்ந்து வருகிறது. பறவைகளை பார்த்து ரசிப்பதற்காகவே இங்கே நிறைய சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள்.
இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்கு முக்கிய காரணம் இதன் இயற்கை எழில் கொஞ்சும் அழகு. இந்த அதிசயமான மிதக்கும் ஏரியும், இங்கே வாழும் மக்களும் உண்மையிலேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.