ரயில்களில் பயணம் செய்யும்போது வெள்ளை நிற பெட்ஷீட்டுகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. இது ஏன் என்று யாராவது யோசித்திருக்கிறோமா?
நம் நாட்டில் நீண்ட தூரம் பயணம் செய்ய அதுவும் குறைந்த செலவில் பயணம் செய்ய வேண்டுமானால் ரயில்களைத்தான் தேர்ந்தெடுப்போம். பாதுகாப்பான பயணம் மட்டுமல்லாமல் வசதியான பயணமாகவும் அமையும் இந்த ரயில் பயணங்கள்.
தினம் தினம் லட்சகணக்கான மக்கள் இதில் பயணம் செய்கின்றார்கள். ரயிலில் ஏசி பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு பெட்ஷீட், போர்வை, தலையணை ஆகிவை வழங்கப்படுகிறது. இவை எப்போதுமே வெண்மையான நிறத்தில்தான் பளிச்சிடும். காரணம் தெரியுமா?
ஏன் மற்ற நிறங்களில் கொடுப்பதில்லை என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?
இந்திய ரயில்வே தினம் தினம் பல ரயில்களை இயக்குகின்றன. தினம் பல்லாயிரக்கணக்கான பெட்ஷீட்டுகள், தலையணை உறைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை ஒருமுறை பயன்படுத்திய பிறகு துவைப்பதற்காக ஓரிடத்திற்கு வரும். துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் சலவைக்காக பெரிய கொதிகலன்கள் இருக்கும். 121 டிகிரி செல்சியஸில் உருவாகும் நீராவியில் இந்த பெட்ஷீட்டுகள், தலையணை உறைகள் துவைக்கப்படும். இவை தொடர்ந்து 30 நிமிடங்கள் நீராவியில் வைக்கப்படுவதால் அவற்றில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
இப்படி ஆயிரக்கணக்கான பெட்ஷீட்டுகளை துவைக்கும் போது வெள்ளை நிறத்தில் இருந்தால் துவைப்பதும் எளிது. வண்ணங்கள் போய் மங்கி விடுமோ என்ற கவலையும் கிடையாது. நீண்ட நாட்களுக்கு நன்றாக வெளுக்கப்பட்டு பளிச்சென்று காணப்படும். அதுவே மற்ற வண்ணங்களில் இருந்தால் அதன் நிறம் மங்கி சீக்கிரம் சாயம் வெளுத்து விடும்.
அதுமட்டுமல்லாமல் வேறு வேறு வண்ணங்களில் இருந்தால் அவற்றை தனித்தனியே துவைக்க வேண்டி வரும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து துவைத்தால் அவற்றின் கலர் மங்குவது மட்டுமில்லாமல் ஒன்றின் சாயம் மற்றொன்றில் இறங்கி விடும். இவற்றை தவிர்ப்பதற்காகத்தான் வெள்ளை நிற பெட்ஷீட், தலையணை உறைகளை மட்டுமே இந்தியன் ரயில்வே பயன்படுத்துகிறது.
அதேபோல்தான் ஹோட்டல்களிலும் படுக்கை விரிப்புகள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம். சலவை செய்யும் போது ஒட்டுமொத்த படுக்கை விரிப்புகளையும் ஒன்றாக சேர்த்து சலவை செய்வதால் வெள்ளை நிறத்தில் இருந்தால் தோய்ப்பது எளிதாவதுடன் அழுக்கு எங்கு அதிகமாக உள்ளது, கரை எங்கு படிந்துள்ளது என்பதை கண்டறிவது எளிதாக இருக்கும்.