
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் ரயில் போக்குவரத்து , தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும் களைப்பின்றியும் பயணம் செய்ய வழி வகுக்கிறது .இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து பயன் பெறுகின்றனர். இத்தகைய வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே மூத்த குடிமக்களுக்கு வழங்கும் 5 சலுகைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. லோயர் பெர்த் வசதி
ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சிரமம் ஏற்படாதவாறு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு லோயர் பெர்த் எனப்படும் கீழ் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த வசதி ரயில்களின் ஸ்லீப்பர், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயர் பெட்டிகளில் கிடைக்கிறது. ரயில் புறப்பட்ட பிறகும் கீழ் இருக்கைகள் காலியாக இருந்தால், அது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.
2. சக்கர நாற்காலி வசதி
வயதான நடக்க சிரமப்படும் முதியவர்களுக்கு ரயில் நிலையங்களில் இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. மேலும் ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகளுடன், உதவிக்கு போர்ட்டர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள்
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுப்பதற்காக ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியின் மூலம் அவர்கள் விரைவாக ரயில் டிக்கெட்டுகளைப் பெற முடிகிறது.
4. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள்
வயதான நடக்க முடியாமல் இருக்கும் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு ரயில் நிலைய பிளாட்பாரங்களில் இருந்து நுழைவு வாயிலுக்கு பெரிய ரயில் நிலையங்களில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (கோல்ஃப் வண்டிகள்) இலவசமாகக் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் அதிகம் நடக்க வேண்டிய அவசியமில்லை
5. உள்ளூர் ரயில்களில் சிறப்பு இருக்கைகள்
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிற்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களின் புறநகர் உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு வசதியான இருக்கையை வழங்குகிறது.
மேற்கூறிய 5 சலுகைகளை ரயில்வே நிர்வாகம் மூத்த குடிமக்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.