இந்தியாவின் குறிப்பிட்ட ஒரு சில மிக முக்கிய நகரங்களுள் கொல்கத்தாவும் ஒன்று. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட அற்புதமான கட்டடக்கலை, சிறந்த ஓவியங்கள், கோயில்கள், வரலாற்றுத் தலங்கள், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சாலைகளில் நகரத்து மக்களின் ஆரவாரம் என இவை காண்போரின் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன. பரபரப்பான வாழ்க்கை முறையிலும்கூட இன்னும் நகரத்தின் பழமையைப் பாதுகாத்து வருகின்றனர். நீங்கள் கொல்கத்தாவிற்குச் சுற்றுலா செல்வதற்கான யோசனையில் இருந்தால் இந்த மூன்று வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்க்கத் தவறிவிடாதீர்கள். எந்த மூன்று இடங்கள்? அவற்றின் சிறப்புகள் என்ன? பார்ப்போம் வாருங்கள்...
கொல்கத்தாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவுக்கான மிக முக்கியச் சின்னமாக இருந்து வருகிறது ஹவுரா பாலம். இது 1946ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலம் ‘ஹவுரா’ மற்றும் ‘கொல்கத்தா’ என இவ்விரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள காரணத்திற்காக இதற்கு ஹவுரா பாலம் என்று பெயரிடப்பட்டது.
ஹுக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் கொல்கத்தா நகரின் நுழைவாயிலாகச் செயல்பட்டு வருகிறது. தினமும் சுமார் 90,000 வாகனங்கள் இந்தப் பாலத்தைக் கடந்து செல்கின்றன. பகல் நேரத்தைவிட இரவு நேரங்களில் பாலம் மின்விளக்குகளின் ஒளியோடு மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறது.
விக்டோரியா மெமோரியல் கட்டடம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மிகப் பிரம்மாண்டமான முறையில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தின் அமைப்பானது வெள்ளைப் பளிங்குக் கற்களால் மிகவும் ஆடம்பரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மஹாராணியின் நினைவாகக் கட்டப்பட்டது. சிலைகள் பல கொண்டு அழகியத் தோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவுச் சின்னம் ஒரு அழகான அருங்காட்சியகமாக மாறியுள்ளது. பண்டைய பொக்கிஷங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு இங்கு 25 அழகிய காட்சியகங்கள் உள்ளது.
இந்தக் கட்டடம் இரவு நேரத்தில் பார்ப்பதற்கு ஒளியும் ஒலியும் பொருந்திய ஒரு அமைப்பாக காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் அமைந்துள்ளது. கொல்கத்தாவிற்கு சுற்றுலா செல்வோர் இந்தக் கட்டடக் கலையின் சிறப்பு மற்றும் ஒளி ஒலி அனுபவத்தை மிஸ் பண்ணவேக் கூடாது!
ஷாப்பிங் இல்லாமல் நம்முடைய சுற்றலா முடிவடைந்து விடுமா என்ன? கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது இந்த எஸ்.எஸ். ஹாக் மார்க்கெட். இதற்கு நியூ மார்க்கெட் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கொல்கத்தாவின் முதல் முனிசிபல் மார்க்கெட் 1874ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஒன்றரை நூற்றாண்டு களுக்குப் பிறகு, பல்வேறு கலாச்சாரங்களின் அடையாளமாக உருமாறியது. உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், குறிப்பாக டாக்கா மற்றும் சிட்டகாங்கிலிருந்து வரும் வங்காள தேசியர்களுக்கும் கூட பிடித்தமான ஒரு இடமாக மாறியது.
3,000 கடைகளைக்கொண்ட இந்தச் சந்தையானது ஒவ்வொரு நாளும் ஒரு பரபரப்பான சூழலில் இருந்து வருகிறது. இங்கு உடைகள், காலணிகள், ஜவுளிப் பொருட்கள், நகைகள், அழகிய கலைநயம் மிக்க மண்பாண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், பல்வகை புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.
சாக்லேட்டுகள், செல்லப் பிராணிகளுக்கான உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களும் அதுபோக தட்டுகள், கைவினைப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், தின்பண்டங்கள், மளிகைப் பொருட்கள்,
பூக்கள், காய்கறிகள், பால், அனைத்து வகையான மீன் மற்றும் இறைச்சியும் சார்ந்த பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. சுற்றுலா செல்பவர்களுக்கு மிகவும் குறைந்த மற்றும் நல்ல தரமான பொருட்களை வாங்குவதற்கான பெஸ்ட் சாய்ஸாக இந்த இடம் கட்டாயம் அமையும்.