வளமான கலாச்சார பாரம்பரியம், அழகிய நிலப்பரப்பு, எண்ணற்ற இடங்கள் மற்றும் அதன் பண்டைய வரலாறு ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஆசியாவில் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்தியாவில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு கிடைக்கும் நேரம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப இடங்களை தேர்ந்தெடுப்பர். அவ்வகையில் நாங்கள் தேர்வு செய்த இடம் டாமன், டையூ.
டாமன் மற்றும் டையூ இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும், இது அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ளது. பல அம்சங்களில் டாமன் மினி கோவாவாகக் கருதப்படுகிறது. இங்கு போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கத்தை ஞாபகப்படுத்தும் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையூ அலைகள் மோதும் கடற்கரைகள் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்க பூமியாக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. நாங்கள் அகமதாபாத் வழியாக முதலில் டாமன் சென்றோம். அங்குள்ள கடற்கரைகள், கோட்டைகள், அழகிய கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கும் ஏரித்தோட்டங்கள், ஆலயங்கள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் பல உள்ளன.
ஜாம்போர் பீச்
அழகான கருப்பு மணல் மற்றும் கருப்பு சேறு கலந்த நீருடன் உள்ள ஜாம்போர் பீச் டாமனின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாகும். இது அமைதியான சூழலில் மரங்கள் சூழ அமைந்திருக்கும் அழகான கடற்கரை. அமைதியையும் தனிமையையும் விரும்புவோருக்கு ஏற்ற இடமாகும்.
தேவ்கா பீச்
டாமன் நகரின் மையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் தேவ்கா கடற்கரை அமைந்துள்ளது. அலை இறக்கம் உள்ள நாட்களில் கடல் நீர் மணற்பரப்பை விட்டு வெகுதூரம் உள்ளே சென்று விடும். அப்பொழுது மணற்பரப்பில் குதிரை, ௐட்டக சவாரிகளைக் காணலாம். நாங்கள் சென்ற சமயத்திலும் கடல் உள்வாங்கியிருந்தது. நாங்கள் அங்கே சிறிது தூரம் காலாற நடந்து விட்டு வந்தோம்.
மோதி டாமன் கோட்டை
16 ஆம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்கள் மோதி டாமன் கோட்டையை கட்டினார்கள், இது டாமனில் உள்ள மிகவும் பிரபலமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். கோட்டையின் தேய்மான நிலை இருந்த போதிலும், டாமனில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக உள்ளது. கோட்டைக்குள் நுழைவதற்கு கட்டணம் உண்டு.
மிராசோல் ஏரி தோட்டம்
நகர மையத்தின் மிக அருகில் மிராசோல் லேக் கார்டன் உள்ளது. அழகிய கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கும் இந்த ஏரித்தோட்டம் மிராசோல் ஏரியின் மையத்தில் கட்டப்பட்டுள்ளது. மனதைக் கவரும் இயற்கை காட்சிகள், கண்கவர் சாகசங்கள் மற்றும் மிகவும் அமைதியான சூழல் நிறைந்த மிராசோல் லேக் கார்டன் தேவ்கா கடற்கரையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் டாமனில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. பசுமையான மரங்கள் மற்றும் அழகான மலர் படுக்கைகளால் சூழப்பட்ட இந்த தோட்டம் இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கவும் வாய்ப்பளிக்கிறது.
இங்கு நீல வண்ண நீர் மற்றும் பல்வேறு வகையான மீன்களைக் கொண்ட ஒரு செயற்கை ஏரி உள்ளது, மேலும் இங்கு மறக்கமுடியாத அனுபவத்திற்காக துடுப்பு படகு சவாரி செய்யலாம்.
Church of Lady of Our Sea
டாமனில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். நகர மையத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது . இந்த தேவாலயம் 1559 இல் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது இவ்வாலயம் கட்டிடக்கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு. தேவாலயத்தின் உள்ளே, பைபிளின் காட்சிகளை சித்தரிக்கும் சில பிரமிக்க வைக்கும் சுவரோவியங்களும் ஓவியங்களும் உள்ளன.
டையூ நாகோவா கடற்கரை
டையூ கடற்கரைகளில், நாகோவா மிகவும் அழகானது மற்றும் மிகவும் பிரபலமானது. இது புச்சார்வாடா கிராமத்தின் நாகோவா குக்கிராமத்தில் அமைந்துள்ளது மற்றும் டையூவிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. நாகோவா அரை வட்ட கடற்கரை, அங்கு மென்மையான மடிப்பு அலைகள் மற்றும் மென்மையான மணல் கரையோரங்களைக் கண்டு மகிழலாம், இந்த கடற்கரையை கோவாவின் சிறந்த கடற்கரைகளுடன் ஒப்பிடலாம்.
கோக்லா கடற்கரை
இது அழகான எழில் மிகுந்த கடற்கரை. சாகச நீர் விளையாட்டுக்கள் இங்கு நடைபெறுகின்றன.
டையூ கோட்டை
டையூ கோட்டை போர்ச்சுகீசியரால் கட்டப்பட்ட கோட்டையாகும்,. 16 ஆம் நூற்றாண்டில் டையூ தீவின் கிழக்கு முனையில் இந்தியாவின் தற்காப்புக் கோட்டைகளின் ஒரு பகுதியாக இந்தக் கோட்டை கட்டப்பட்டது. டையூ நகரின் எல்லையில் அமைந்துள்ள இந்தக் கோட்டை, 1535 ஆம் ஆண்டில் குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷா மற்றும் போர்ச்சுகீசியர்களால் முகலாயப் பேரரசரான ஹுமாயூன் இந்தப் பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபோது கட்டப்பட்டது. கோட்டையில் பூங்கா,சிறைச்சாலை மற்றும் கலங்கரை விளக்கம் உள்ளன, இன்று இது டையூவின் அடையாளமாகவும், போர்ச்சுகீசிய வம்சாவளியின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகுவும் விளங்குகிறது.
கங்கேஷ்வர் மஹாதேவ் கோயில்
கங்கேஷ்வர் கோயில் டையூவிலிருந்து 3 கிமீ தொலைவில் ஃபுடம் கிராமத்தில் அமைந்துள்ளது. கங்கேஷ்வர் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் கடற்கரையில் பாறைகளுக்கு மத்தியில் காணப்படுகிறது. இது கடற்கரையில் அமைந்திருப்பதால், கங்கேஷ்வர் குகைக் கோயிலில் உள்ள சிவலிங்கங்களுக்கு கடல் அலைகளால் தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படுகிறது, பாண்டவர்கள் வனவாசத்தின்போது இக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டதாக நம்பப்படுகிறது.
இயற்கையை நேசிப்பவர்கள் மற்றும் அமைதியை விரும்புபவர்களுக்கேற்ற சுற்றுலாத்தலம் டாமன், டையூ என்பதில் ஐயமில்லை.