சீனாவில் ஏராளமான இடங்கள் சுற்றிப்பார்ப்பதற்கு உள்ளன. ஆனால், மௌன்ட் தாய் மலை சீனாவின் பல நூற்றாண்டு வரலாற்றைத் தாங்கி நிற்கிறது என்றே கூற வேண்டும். சீனாவிற்கு சுற்றுலா செல்லும்போது எங்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இந்த இடத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க.
சீனாவின் தைஷான் பகுதியில் அமைந்துள்ள மௌன்ட் தாய் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். 6,600 படிகட்டுகளைக் கொண்ட இந்த மௌன்ட் தாய், 1,545 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலையில் ஏறும் பயணிகள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் அதிக படிகட்டுகள் கொண்ட கோவில் என்றால், அது திருப்பதிதான். ஆனால், திருப்பதியில் 3500 படிகட்டுகளே உள்ளன. சீனாவில் உள்ள இந்த தாய் மலையில் அதிகாரப்பூர்வமாக 6,600 படிகட்டுகளும், ஒட்டுமொத்தமாக 7,200 படிகட்டுகளும் உள்ளன.
இந்தப் படிகட்டுகளை ஏறும்போது சுற்றுலா பயணிகள் அவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த மலையின் உச்சியை அடைய, செங்குத்தானப் படிகட்டுகளில் ஏறுவதற்கு தகுந்த உடல் தகுதி இருந்தே ஆக வேண்டும். வழக்கமாக நடைப்பயிற்சி, ஜாக்கிங் செய்யாதவர்கள், திடீரென்று இந்த மலையில் ஏறினால் பல உடல்ரீதியான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
இந்தத் தாய் மலை உள்ள பகுதியில் அடிக்கடி வெப்பநிலை மாறுவதால், இதன்மேலே ஏறுபவர்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் கஷ்டமாகவுள்ளது. திடீரென்ற அதிகமான வெயில் அவர்களின் ஆற்றலை குறைக்கிறது. அதேபோல், அதிக மழை, படிகளை வழுவழுப்பாக்குகிறது. இதுபோன்ற காலநிலை மாற்றம் மணிக்கு மணி நிகழ்வது சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய தொல்லையாக அமைகிறது.
அதேபோல், சில சமயம் அதிக அளவு பயணிகள் அங்கு செல்வதால், நெரிசல் அதிகமாகி மலையேற்றம் மேலும் கடினமாகிறது. படிகட்டுகள் ஏறுகையில், காற்றோட்டம் என்பது மிகவும் முக்கியம். ஆனால், நெரிசலான சமயத்தில், காற்றோட்டம் குறைந்து அது சுற்றுலா பயணிகளுக்கு தடையாக அமைகிறது.
மேலும், உயரமாக செல்லும்போது சிலருக்கு தலைவலி, குமட்டல், தலை சுற்றல் ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், சிலர் கையோடு மருந்துகளையும் எடுத்துச் செல்கின்றனர்.
பொதுவாக, இந்த மலையின் மீது ஏறுபவர்கள் சந்திக்கும் சிரமமான விஷயம் எதுவென்றால், பாதி படிகட்டுகள் ஏறும்போதே அவர்களுக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன. இருப்பினும், எப்படியாவது உச்சியை அடைய வேண்டும் என்று குச்சிகளின் உதவியுடன் உச்சியை அடைந்துவிடுகின்றனர். சில சுற்றுலா பயணிகள் படிகட்டுகளில் ஊர்ந்தே செல்கின்றனர். மேலும் சிலரின் கால்கள் வலுவிழந்து நடுங்குவதால், ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி செல்லப்படுகின்றனர்.
மௌன்ட் தாய் படிகட்டுகளில் ஏற குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரமாகிறது. ஆனால், மலை ஏறுபவர்கள் ஆங்காங்கே ஓய்வு எடுத்து செல்வதால், கூடுதல் நேரமே ஆகிறது. பயணிகள் ஏற ஆரம்பிக்கும் சில நேரங்களிலேயே வலியால் அழவும் செய்கின்றனர்.
சீன பயணிகள் அழுது, ஊர்ந்து அந்த உச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன அந்த கோவிலில் இருக்கிறது..
சீனாவின் புனிதத்துவம் வாய்ந்த மலையாகக் கருதப்படும் இந்த மௌன்ட் தாய் வரலாறு, கலை, கலாச்சாரம், அறிவியல் என அனைத்தையும் தாங்கி நிற்கும் ஒரு மலையாகும். கடந்த மூன்றாயிரம் வருடங்களுடைய பெருமையின் அடையாளமாகவும், கம்பீரமாகவும் நிற்கும் இந்த மலைக் கோவில், வெற்றிகளின் அடையாளமாகவும் உள்ளது. அதாவது, 219BCE காலக்கட்டத்தில் ஆட்சிப்புரிந்த Qin, Huang Di ஆகியோர் தங்களது வெற்றிகளை இந்த கோவிலுக்குதான் சமர்ப்பணம் செய்தார்கள்.
1009AD காலக்கட்டத்தில் வரையப்பட்ட வரலாற்றின் பழமைவாய்ந்த ஓவியங்கள் அந்த தாய் மலையில் பார்க்கலாம். அதேபோல் பள்ளத்தாக்குகளில் புத்தர்களின் வேதங்களையும் பார்க்கலாம். Zhang Qian, Heng Fang, Jin sun போன்ற சீனாவின் புகழ்பெற்ற பேரரசர்கள் காலத்தின் கல்வெட்டுகளையும் நீங்கள் அங்குப் பார்க்கலாம். சீன மக்களின் கடவுளாக இருக்கும் தைஷானை தரிசிப்பதற்கும், சீனாவின் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கலை, கலாச்சாரத்தைப் பார்ப்பதற்குமே சீன மக்கள் அத்தனை கஷ்டங்களை எதிர்கொண்டு மலையின் உச்சியை அடைகிறார்கள்.