
கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கும் மார்ச் மாதத்தில் சுற்றுலா செல்வது மனதிற்கு இதமான நிகழ்வாகும். அந்த வகையில் மார்ச் மாத மன நிறைவுக்கு சுற்றுலா செல்லவேண்டிய சிறந்த இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மார்ச் முதல் ஜூன் வரை சீசன் நிலவும் ஸ்ரீ நகரில் முகல் கார்டன்ஸ், முகலாய மன்னர் கால கோட்டை, ஊலர் ஏரி, டால் ஏரி, நிஜீன் ஏரி போன்ற சுற்றுலாத்தலங்கள் வெகு சிறப்பானதாக இருக்கின்றன. வெப்பநிலையும் அதிகபட்ச 30 டிகிரி குறைந்தபட்சம் 10 டிகிரி ஆக உள்ளதால் பனிபடர்ந்த மலை பிரதேசங்களை சுற்றிப் பார்க்க ஹனிமூன் செல்பவர்களுக்கு ஏற்ற சிறந்த இடமாக ஜம்முவின் தலைநகர் ஸ்ரீ நகர் உள்ளது.
கர்நாடக மாநில மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முல்லையனகிரி சிகரத்தின் அடியில் அமைந்திருக்கும் மலை பிரதேசமான சிக்மங்களூரில் அதிக அளவு காபி தோட்டங்கள், ஆறு, அருவிகள், கோவில்கள், மலையேற்றத்திற்கான இடங்கள் என அனைத்தும் ஒருங்கேஅமையப் பெற்றுள்ளதால் மார்ச் மாத சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது. மேலும் மார்ச் மாதத்துடன் சீசன் நிறைவடைவதால் பகலிலும் இரவிலும் குளிர்ந்த வானிலையே நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவான் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை வாழ்ந்ததால் இங்கு வரலாற்று சுவடுகளை அதிக அளவில் காணலாம். மார்ச் மாதத்துடன் இங்கு சீசன் முடிவடைவதால் இங்குள்ள 5500 க்கும்மேற்பட்ட கிருஷ்ணர் ராதா கோவில்களை கண்டு தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆறு, அருமையான வானிலை, பனிபடர்ந்த மலைகள் பசுமையான பள்ளத்தாக்குகள் நிறைந்த இமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் குலு நகரில் ஏப்ரல் மாதத்தில்தான் சீசன் தொடங்கும் என்றாலும் அந்த தாக்கம் மார்ச் மாதத்திலேயே தெரியவரும். ஆகையால் பவுத்த மடங்கள், பூங்காவை சுற்றி பார்ப்பதற்கும் மலையேற்றத்திற்கும் கோவில்களை கண்டு களிக்கவும் மார்ச்சில் பயணம் மேற்கொள்ளலாம்.
இயற்கையை கொண்டாட நினைப்பவர்கள் பெரியார் வனவிலங்கு சரணாலயம், புல்மேடு, பாண்டிக்குழி, யானை சவாரி ,போட்டிங் ,பறவைகளை பார்க்கவும், மன நிறைவாக பொழுதை போக்கவும் கேரளாவில் உள்ள தேக்கடிக்கு மார்ச் மாதத்தில் சுற்றுலா செல்லலாம். பிப்ரவரி மாதம் சீசன் முடியும் என்றாலும் மார்ச் மாதமும் இதமான காலநிலை நிலவும்.
பாறை ஏறுதல், செங்குத்தான பாறைகள் ,மலைகளில் கயிறுகள் மூலம் ஏறும் Rapelling போன்ற சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள அழகான மலை பிரதேசமான சக்ரதா மார்ச் மாதம் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரை சீசன் என்றாலும் மார்ச் மாதத்திலேயே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் அற்புதமான இடம் ஆகும்.
பழமையான ஓவியங்களும், சிற்பங்களும் நிறைந்துள்ளதோடு பவுத்த, சமண ,இந்து மத நினைவு சின்னங்கள் அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோராவில் மார்ச் மாதத்தில் இதமான காலநிலை நிலவும் என்பதால் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக உள்ளது. யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில் ஒன்றான இங்கு மலை ஏற்றமும் செய்யலாம்.
மார்ச் மாதத்தில் மேலே குறிப்பிட்ட இடங்களுக்கு பயணம் செய்தால் சிறப்பான அனுபவங்களை இனிமையாக பெறலாம்.