
இந்தியாவின் வட மாநிலங்களில் பிப்ரவரி மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் தென்னிந்தியாவைப் பொறுத்த வரை பனிப்பொழிவு இல்லாவிட்டாலும், இதமான கால நிலையால் சுற்றுலா செல்ல ஏற்ற மாதமாக உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து தவறவிட கூடாத 5 மலைப் பிரதேசங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே, தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. இங்கு பிப்ரவரி மாதத்தில் வானிலை இதமாக இருக்கும். மேலும் மலையேற்றம் செல்ல உகந்த இடங்கள் இருப்பதோடு, பல நீர்வீழ்ச்சிகள் அழகுற அமைந்துள்ளன .இதைவிட இங்கு நிகழும் சூரிய அஸ்தமனம் வெகு பிரசித்தம் என்பதால் இதை தவறவிடவே கூடாது.
பலரும் அறியாத கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியம்பதி, பிப்ரவரி மாதத்தில் பார்த்து ரசிகத்தக்க சிறந்த மலைப்பிரதேசமாகும். ஏனெனில் இங்கு பிப்ரவரி மாதம் சுற்றுலாவிற்கு சிறந்த இதமான காலநிலையை கொண்டிருக்கும். நகர வாழ்வில் இருந்து உங்களை மீட்டெடுத்து இதமான அனுபவத்தை வழங்கும்.
கேரளாவில் உள்ள வாகமன் பிப்ரவரி மாத சுற்றுலா செல்வதற்கு சிறந்த மலை பிரதேசங்களில் மிகவும் சிறந்ததாக உள்ளது. ஏனெனில் இங்கு ஆன் ரோடு, ஆஃப் ரோடு சவாரிகள் வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதோடு, இரவு நேர கேம் பயர் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. அதோடு இங்குள்ள ஏரிகளும், மற்ற சுற்றுலாத் தலங்களும் பயணிகளுக்கு நிறைவான சுற்றுலா அனுபவத்தை வழங்குகின்றன.
கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சக்லேஷ்பூர் அழகிய மலைப்பிரதேசமாக இருப்பதால் பிப்ரவரியில் இங்கு சுற்றுலா சென்றால் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். இங்குள்ள நீர்வீழ்ச்சிகளும், காபி தோட்டங்களும், மலையேற்ற பகுதிகளும், அழகிய மலைகளும், பள்ளத்தாக்குகளும், இயற்கையை நேசிக்கும் காதலர்களுக்கு விருப்பமான இடங்களாக இருக்கும்.
கிழக்கு தொடர்ச்சி மலையின் சேர்வராயன் மலைத்தொடரில் சேலத்தில் உள்ள இந்த மலைப் பிரதேசம், பிப்ரவரி மாத சுற்றுலாவிற்கு சிறந்த ஸ்பாட். 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆரஞ்சு தோட்டங்களும், காபி தோட்டங்களும், இயற்கை அழகு நிறைந்த பகுதிகளும் கண்களுக்காக விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேற்கூறிய இடங்களுக்கு இந்த பிப்ரவரி மாதத்தில் சுற்றுலா சென்றால் காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் இனிமையான அனுபவத்தைப் பெறமுடியும்.